Paristamil Navigation Paristamil advert login

இரும்பு நுரையீரலுடன் நீண்ட 70 ஆண்டுகள்... விடை பெற்றார் Polio Paul

இரும்பு நுரையீரலுடன் நீண்ட 70 ஆண்டுகள்... விடை பெற்றார் Polio Paul

14 பங்குனி 2024 வியாழன் 08:14 | பார்வைகள் : 650


நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்து வந்த Polio Paul என பரவலாக அறியப்பட்ட பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1952ல் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் வசித்து வந்த பால் அலெக்சாண்டர் போலியோவால் தாக்கப்பட்ட நிலையில் முடங்கிப் போனார். தலை, கழுத்து மற்றும் வாயை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது.

அவரை இரும்பு நுரையீரலில் இணைப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்றே கூறப்பட்டது. மருத்துவர்களின் அந்த வித்தியாசமான முடிவால், பால் அலெக்சாண்டார் 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார்.

ஆனால் திங்களன்று, மார்ச் 11ம் திகதி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளிடப்பட்டுள்ளது. போலியோ தாக்குதலால் முடங்கிப்போன பால் அலெக்சாண்டர் நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் உயிர் வாழ்ந்த நிலையில், திடீரென்று மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கல்லூரி படிப்பை முடித்து சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி, தமது கதையை அவர் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவரது கதை உலகமெங்கும் பரவி பலருக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இதுபோன்ற ஒரு இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த நபர் 2017ல் மரணமடைந்துள்ளார். 6 வயதேயான பால் அலெக்சாண்டர் 1952 ஜூலை மாதம் குடியிருப்புக்கு வெளியே விளையாடிவிட்டு காய்ச்சல் அறிகுறியுடன் வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த சிறுவனால் பேசவோ, விழுங்கவோ, இருமவோ அல்லது பேனாவைப் பிடிக்கவோ முடியாமல் போனது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு பின்னர் கண் விழித்த பால் அலெக்சாண்டர், தாம் ஒரு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்ததை உணர்ந்தார். அதுவே அவரது ஆயுள் முழுவதும் நீடிக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது தமது 78வது வயதில் பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு உலகமெங்கிலும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்