Paristamil Navigation Paristamil advert login

மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு

23 பங்குனி 2024 சனி 09:39 | பார்வைகள் : 584


மட்டன் குழம்பை எப்போதும் போல் அல்லாமல் காரசாரமாக செய்து சாப்பிட நீங்கள் விரும்பினால் இங்கே குறிப்பிட்டுள்ள செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 - 20

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 3

பட்டை - 1

ஏலக்காய் - 2

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் அரைக்க தேவையானவை :

துருவிய தேங்காய் - 1 கப்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

செட்டிநாடு மசாலா பொடி அரைக்க தேவையானவை :

வரமிளகாய் - 6

கொத்தமல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 2

ஏலக்காய் - 5

அன்னாசிப்பூ - 1

செய்முறை:

முதலில் தேவையான அளவு மட்டனை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் செட்டிநாடு மசாலா பொடிக்கு எடுத்துவைத்துள்ள வரமிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் முழுமையாக ஆறியவுடன் நன்றாக காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தலித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.

அதன் பச்சை வாசனை போனவுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் அலசி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி குறைவான தீயில் 8 விசில் வரும் வரை விடவும்.

குக்கரின் பிரஷர் தானாக அடங்கியவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

மட்டன் குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி…

வர்த்தக‌ விளம்பரங்கள்