Paristamil Navigation Paristamil advert login

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலைக்கு பாரிய பாதிப்பு - இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை!

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலைக்கு பாரிய பாதிப்பு - இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை!

2 பங்குனி 2024 சனி 11:14 | பார்வைகள் : 710


அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட 205 மெகாவாட் மன்னார் காற்றாலை திட்டம், சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலை ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (‍பெப். 27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தினால் மன்னார் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற நேரடி, மறைமுக பாதிப்புகள் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் 250 இனங்களைச் சேர்ந்த சுமார் 15 மில்லியன் இடம்பெயரும் பறவைகள் விரும்பும் முக்கிய  இடமாக, மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையின் (CAF) தெற்கு பகுதியிலுள்ள இலங்கை விளங்குகிறது.

குறிப்பாக, மன்னார், 150 இனங்களை உள்ளடக்கிய சுமார் ஒரு மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதி 26 வகையான அச்சுறுத்தலுக்கு உள்ளான பறவைகளுக்கு இனப்பெருக்க வாழ்விடங்களை வழங்குகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் CAF srilanka Waterbird Tracking Projectஇன் அறிவியல் சான்றுகளின்படி, புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான நுழைவு மற்றும் வெளியேறும் இடமாகவும் மன்னார் விளங்குகிறது.

மன்னாரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (அடம்ஸ் பாலம் தேசிய பூங்கா, வங்காலை சரணாலயம் (ஒரு ரம்சா ஈரநிலம்) மற்றும் விடத்தல் தீவு இயற்கை காப்பகம்) மற்றும் இடம்பெயரும் உயிரினங்களின் மாநாடு (CMS) உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு மற்றும் ரம்சா மாநாடு (CBD) போன்ற சர்வதேச மாநாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் மன்னார் காற்றாலை மின் திட்டம் (கட்டம்) சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலை ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது யாலா தேசிய பூங்கா, சிங்கராஜா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும்  ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற மன்னாரின் எல்லைகளுக்கு அப்பாலும் பாதிக்கப்படும்.

பசுமை ஆற்றல் எதிர்காலத்துக்கு முக்கியமானது. பசுமை ஆற்றல் திட்டங்களின் அபிவிருத்திக்கு இலங்கைக்கு சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார இழப்புகளைத் தணிக்க மூலோபாய சூழலியல் மதிப்பீடுகள் (SEA) தேவை. avistep போன்ற கருவிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்கும் அதேவேளை ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

இது தொடர்பில் வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன கூறுகையில்,

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் சுற்றாடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தி தொடர்பில் மதிப்பீடு செய்ய மூன்று சட்டங்கள் உள்ளன.

அவை, தேசிய சுற்றாடல் சட்டம், கரையோர பாதுகாப்பு சட்டம், தாவர மற்றும் விலங்கியல் (திருத்தச்) சட்டம் ஆகியவையாகும்.

மன்னார் காற்றாலை திட்டம் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை இந்த திட்டம் பெறவேண்டும்.

கடந்த காலம் போல் அல்லாமல் சுற்றாடல் அதிகார சபை சுற்றுச்சூழலை மதிப்பிடும் நிறுவனம் கண்டிப்புடன் செயற்படுகிறது.

இந்த அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை மதிப்பீடு செய்யவுள்ளது.

இதற்கு எழுத்து மூலம், வாய்மூலம் கருத்துக்களை சமர்பிக்க முடியும். அக்கறையுள்ள பொதுமக்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து குறித்து கருத்து தெரிவிக்கலாம். அது மார்ச் 6ஆம் திகதி வரை பொதுக்கருத்துக்கு திறந்திருக்கும். கருத்துக்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு CEA dg@cea.lk என்ற மின் அஞ்சலுக்கு அனுப்ப முடியும் என்றார்.

மன்னார் காற்றாலை திட்டத்தின்  சில முக்கிய குறைப்பாடுகள்

* இலங்கை சட்டங்களை மீறி முழுமையடையாத குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

* வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய பங்குதாரர்களின்  ஆலோசனை மற்றும் மேற்பார்வை இல்லாமை.

* பறவைகள் தொடர்பான ஆய்வு முறை (Avifaunal) போன்றவற்றில் சிக்கல்கள்.

பறவை கண்காணிப்புகளின் நேரம் மற்றும் பருவம் போதுமானதாக இல்லை. முக்கியமாக இடம்பெயர்ந்த காலங்களை கவனிக்கவில்லை.

* மோதல் இடர் மதிப்பீட்டு முறைமை வலுவானதாக இல்லை.

*காலாவதியான முறைகள் மற்றும் மன்னாருக்கு கிடைக்கக்கூடிய மேம்பட்ட கண்காணிப்புத் தரவுகளின் பயன்பாடு இல்லாமை.

*பறவைகளின் நடமாட்டம் பற்றிய சர்வதேச மரபுகள் மற்றும் அறிவியல் இலக்கியங்களின் அலட்சியம்

*மன்னார் மக்களின் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புக்கள் குறித்து போதிய கவனம் செலுத்தாமை.

*வெள்ளப் பாதிப்புகள் மற்றும் தணிப்பு பற்றி போதியளவு கருத்தில் கொள்ளப்படவில்லை.

* திட்ட இருப்பிடத் தளங்கள் ஒன்றுடன் ஒன்று சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் இணைப்பைத் தடுக்கின்றன.

*குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்துடன்  ஆலோசனைகளை நடத்த தவறியது.

*குறைந்த சூழலியல் தாக்கம் கொண்ட மாற்றுத் தளங்களின் போதிய அங்கீகாரம் இல்லாமை. போன்றவை காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சம்பத் எஸ்.செனவிரத்ன தெரிவிக்கையில்,

மத்திய ஆசியா வழியாக இலங்கைக்கு பில்லியன் கணக்கான பறவைகள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றன.

உலகிலுள்ள  பறவைகள் இடம்பெயரும் 8 பாதையூடாக, ஒவ்வொரு வருடமும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன.

இவ்வாறு தெற்கிற்கு இடம்பெயரும் பறவைகள் 6 மாதங்கள் தங்கிவிட்டு வடக்கிற்கு செல்லும். இவ்வாறு பறவைகள் இடம்பெயரும் பாதைகளில் இலங்கையும் ஒன்றாகும்.

தலைமன்னார், பேசாலை, வங்காலை, உடுமலை, விடத்தல் தீவு, மன்னார் நகர் ஆகிய பகுதிகளுக்கு பறவைகள் வருகை தருகின்றன.

இவை அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான ஈரநிலங்கள் ஆகும்.

இவ்வாறு இடம்பெயரும் பறவைகள் 22,000 அடி உயரம் வரை பறக்கும். இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் 25,000 கிலோ மீற்றர் வரை தனது பயணத்தை மேற்கொள்கின்றன என்றார்.

மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையில் (CAF) தெற்குப் பகுதியான 30 நாடுகளில் இருந்து 250 இனங்களைச் சேர்ந்த 15 மில்லியன்  பறவைகள் இடம்பெயர்ந்து இலங்கைக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றன.

இவற்றில், 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பறவைகள் மன்னாரிக்கு வருகை தருகின்றன, இது ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக செயல்படுகிறது, மேலும் 26 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது.

மன்னார் வழித்தடத்தில் வரவிருக்கும் உத்தேச 50 காற்று விசையாழி மின் திட்டத்தால் அந்த பறவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும். உத்தேச 250 மெகாவாட் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும்

உயிர் பல்வகைமை விஞ்ஞானி மற்றும் பொதுக் கொள்கை வழக்கறிஞர் கலாநிதி ரொஹான் பெத்தியகொடை தெரிவிக்கையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முன்மொழிவுகள் மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

தாம் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான முன்மொழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிராகரிக்கப்பட்டால், அந்த திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்