Paristamil Navigation Paristamil advert login

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

27 பங்குனி 2024 புதன் 10:19 | பார்வைகள் : 427


சிறுவர் பராயமே ஒரு மனிதன் கவலைகளை மறந்து எல்லையில்லா மகிழ்ச்சியை அனுபவித்த காலம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது தலைகீழாய் மாறிப் போய்விட்டது. நாளைய உலகை காண்பதற்கு இன்றே தயாராகிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் மகிழ்ச்சியை மட்டுமல்லாது, கசப்பான அனுபவங்களையும் வடுக்களையும் சுமந்துகொண்டே எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர். 

அனைத்து சிறுவர்களும் சிறுவர் துஷ்பிரயோகத்தின் வகைகளான பாலியல் துஷ்பிரயோகம், உடலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஒன்றையாவது தமது வாழ்நாளில் அனுபவிக்கின்றனர். இவை சிறுவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கே அதிகமாக சிறுவர்கள் குறிப்பாக சிறுமிகள் முகங்கொடுக்கின்றனர். இவ்வாறு பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சிறுமியரில் சிலர் கர்ப்பம் தரித்தலுக்கும் உள்ளாகின்றனர். 

சிறு வயது கர்ப்பம் என்பது பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு சிறுமி, தான் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கர்ப்பம் தரித்தலுக்கு உள்ளாகுவது. இது இள வயது கர்ப்பம் அல்லது இளமைப் பருவ கர்ப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது 18 வயதுக்குட்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினையாக கருதப்படுகிறது. ஏனெனில், இளம் தாய் மற்றும் அவரது குழந்தைக்கு கடுமையான உடல், உள, பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தும். இது வறுமையின் சுழற்சியை நிலைநிறுத்தும் மற்றும் இளம் தாய்க்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை மட்டுப்படுத்தும்.

உலகளாவிய ரீதியில் 2022ஆம் ஆண்டு 13%மான சிறுமிகள் 18 வயதினை அடைவதற்கு முன்னரே கர்ப்பம் தரித்து குழந்தை பிரசவித்துள்ளதாக ஆய்வொன்றின் புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. அந்த வகையில் இலங்கையில் கடந்த வருடம் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 167 சிறுமிகள் கர்ப்பிணிகளாக்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 22 சிறுமிகள் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய காலகட்டத்தில் சிறுவர் கர்ப்பம் தரித்தலில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதில் முக்கிய காரணி சிறுவர்களின் முக்கியத்துவம், அவர்களின் நலன்கள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றிய புரிதல் சமூக மட்டத்தில் இல்லாமல் இருப்பதாகும். அத்தோடு பெற்றோர்கள் பிள்ளைகள் மீது முழுமையான அக்கறை செலுத்தாமல் இருப்பதும் சிறுவர் கர்ப்பங்கள் அதிகரித்தமைக்கு பிரதான காரணமாகும். 

பெற்றோர்களின் அதிகரித்த வேலைப்பளுவின் காரணமாக அவர்களுக்கு தங்களது பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லை. எனவே, தமது பிள்ளைகளை தனியாக வீடுகளிலோ தமக்கு தெரிந்தவர்களின் வீடுகளிலோ அல்லது உறவினர்களுடனோ தங்கவைத்துவிட்டு பெற்றோர்கள் வேலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்லும்போது குற்றம் இழைப்பவர்கள் இலகுவாக சிறுவர்களை நெருங்கி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகின்றனர். அதுமட்டுமன்றி, தமது பிள்ளைகள் நேரலையிலோ அல்லது நேரடியாகவோ யாருடன் கதைக்கின்றார்கள் மற்றும் எவ்வகையான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதை பற்றி அறியாமல் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பெற்றோருக்கு தெரியாமல் காதல் உறவுகளில் ஈடுபடுகின்றனர். 

சில சந்தர்ப்பங்களில் காதலிக்கும் நபரின் வலைக்குள் சிக்கி தான் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுத்து கர்ப்பம் தரிக்கின்றனர்.

சிறுவர் கர்ப்பம் அதிகரித்தமைக்கு மற்றுமொரு காரணம் போதைப்பொருள் பாவனையாகும். சமூகத்தில் உள்ள சில நபர்களிடத்திலும் பாடசாலை மாணவர்களிடத்திலும் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. 

இது சிறுவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, அவர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கும் மற்றும் பெரியவர்களால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. உதாரணமாக, வீட்டில் தந்தையோ அல்லது மற்றையவர்களோ போதைப்பொருள் அல்லது மதுபானத்துக்கு அடிமையாகி இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை அறியாமலோ அல்லது வேண்டுமென்றோ வீடுகளில் உள்ள சிறுவர்களை பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாகவோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கோ உள்ளாக்கலாம். 

போதைப்பொருளுக்கு அடிமையானவர் சிறுவர்களை குறிவைத்து வீதிகள், மறைவிடங்கள், பேருந்துகள் மற்றும் ஏனைய இடங்களிலும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொள்ளலாம். அத்தோடு, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து போதைப்பொருளினை பாவிக்கும்போதோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்தும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும்போதோ தான் விரும்பியோ அல்லது வற்புறுத்தப்பட்டோ பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்தலுக்கு உள்ளாகின்றனர். 

பெற்றோர்களில் தாய் அல்லது தந்தை வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் யாருடைய பொறுப்பில் இருக்கின்றார்களோ அவர்களினாலும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். உதாரணமாக, தாய் தனது பிள்ளைகளை அவர்களின் தந்தையின் பொறுப்பில் விட்டுச் செல்கையில் பிள்ளைகள் தந்தையினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் தரித்தலுக்கு உள்ளான சம்பவங்களும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் தந்தை தமது பிள்ளைகளை தாயின் பொறுப்பில் விட்டுச் செல்கையில் தாய் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும்போது அந்நபரினாலும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கின்றனர். 

அதுமட்டுமன்றி, இளவயது திருமணமும் சிறுவர் கர்ப்பம் தரித்தலுக்கு முக்கிய காரணமாகும். அதாவது சிறிய வயதிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் மற்றும் முன்கூட்டியே இவருக்கு தான் எனது பிள்ளையை திருமணம் செய்து கொடுப்பேன் என தீர்மானித்து வைத்தல் அல்லது பிள்ளைகள் காதல் உறவுகளை முன்னெடுத்து செல்லும் போது பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சக துணையுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபட்டு கர்ப்பம் தரித்தலுக்கு உள்ளாகலாம். 

சிறுவர் கர்ப்பத்துக்கு வறுமை ஒரு முக்கிய காரணியாகும். வறிய சமூகங்களில் இளம் பெண்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் இளம் பெண்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்லது சவாலான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக ஆரம்பகால பாலியல் செயற்பாடு உட்பட ஆபத்தான நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும். அதிகமாக, குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் விரிவான பாலியல் கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் இல்லாதது இளவயது கர்ப்பத்தின் சுழற்சியை மேலும் அதிகரிக்கலாம். இறுதியில், இளம் பெண்களின் ஆரம்பகால கர்ப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களுக்கு பாதிப்பை அதிகரிப்பதில் வறுமை ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது ஒரு வகையான பாலியல் சுரண்டலாகும். இது தேவையற்ற கர்ப்பம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் உடலை விற்கும்படி அழுத்தம் கொடுக்கலாம் அல்லது பாலியல் வர்த்தகத்தில் அவர்களை கட்டாயப்படுத்தலாம். இந்த கையாளுதல் இளம் பெண்கள் தங்கள் சம்மதம் அல்லது கருத்தடை பற்றிய அறிவு இல்லாமல் கர்ப்பம் தரிக்க வழிவகுக்கும். பெற்றோரிடமிருந்து ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால், பாதிக்கப்படக்கூடிய சிறுமிகள் இளம் வயதிலேயே தாய்மையின் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அவர்களின் உடல், உணர்ச்சி மற்றும் மன நலனில் பேரழிவு தரக்கூடிய தாக்கங்கள் ஏற்படலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விபச்சாரம் போன்ற தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் தள்ளுவதை விட, அவர்களைப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம்.

சிறுவர்கள் கர்ப்பம் தரிப்பதானது அவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் பிரசவிக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும்.

சிறுவர்கள் உடலளலிலும் மனதளவிலும் மென்மையானவர்கள். அவர்களுக்கு கரு தரித்து குழந்தையை சுமந்து பிரசவிப்பதற்கான வலிமை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் காணப்படுவதில்லை. அதற்கு அவர்களது உடல் தயாராகவும் இல்லை. அவ்வாறு இருக்கும் சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவிக்கும்போது தாய் பிரசவத்தின்போது இறக்கலாம் அல்லது குழந்தை இறக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இருவரும் இறக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. அல்லது குழந்தை எடை குறைவாக, மந்தபோசணையுடன் அல்லது அங்கவீன குழந்தையாகவோ பிறக்கலாம். குழந்தையை பிரசவிக்கும் சிறுமியும் உடலியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகலாம். 

சிறுவர்கள் கர்ப்பம் தரிப்பதனால் அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனவே, கல்வியில் பின்னடைவு, கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமை, பாடசாலை இடைவிலகல் மற்றும் ஏனைய துறை சார் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமை போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்தோடு உள ரீதியாகவும் பயம், விரக்தி, சோர்வு, கவலை போன்றவற்றுக்கும் உள்ளாக நேரிடும். சிறு வயது கர்ப்பமானது ஆரோக்கியமான எதிர்கால தலைமுறை உருவாவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது குழந்தையை பிரசவிக்கும் சிறுமியின் எதிர்காலம் மற்றும் அக்குழந்தையின் எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. 

சமூக மத்தியில் சிறுவர்கள் பற்றிய விழிப்புணர்வு இன்மையே சிறுவர் கர்ப்பங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் நேரடி மற்றும் நேரலை செயற்பாடுகளை கண்காணித்து அதில் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். அவ்வாறு செயற்படும்போது குற்றமிழைப்பவர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை பாதுகாத்திட முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளை தனியாகவோ அல்லது தெரிந்தவர்களிடமோ விட்டுச் செல்லாது தம்முடைய கவனிப்பிலேயே வைத்திருத்தல் வேண்டும். அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சிறுவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாலேயும் சிறுவர்களின் உறவினர்களாலேயுமே இடம்பெறுகின்றன. எனவே பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருத்தல் வேண்டும். குறிப்;பாக சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போதும் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்;கு பிள்ளைகள் முகங்கொடுக்கும்போது அதில் இருந்து எவ்வாறு அவர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதினை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவர்களின் உடல் அவர்களுக்கே சொந்தம். தவறான எண்ணத்தில் சிறுவர்களை யாரும் நெருங்குவார்களாயின் அது தொடர்பில் பெற்றோருக்கு அறிய தர அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பிள்ளைக்கு பாலியல் கல்வியின் அடிப்படைகளை கற்பிப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் இன்றியமையாத பகுதியாகும். ஒரு பெற்றோராக, அவர்களின் உடல்கள், இனப்பெருக்கம் மற்றும் உறவுகள் பற்றிய துல்லியமான மற்றும் வயதுக்கு ஏற்ற தகவல்களை அவர்களுக்கு வழங்குவது பெற்றோருடைய  பொறுப்பு.

நேரடியாக மட்டுமன்றி நேரலையினை பயன்படுத்தியும் குற்றவாளிகள் சிறுவர்களை அனுகி பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொள்கின்றனர். அதாவது குற்றவாளிகள் நேரலையில் ஆள்மாறாட்டம் செய்து சிறுவர்களை அவர்களின் வலைக்குள் சிக்க வைத்து அவர்களை தனியாக வரவழைத்து கற்பழித்தலுக்கு உள்ளாக்குகின்றனர். எனவே நேரலையினை பயன்படுத்தும் போது நேரலை பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். நேரலையில் அறிமுகமான வரை நேரில் சந்திக்க செல்லும்போது தனியாக செல்லாது நம்பிக்கைக்கு உரிய பெரியவர்களுடன் செல்ல வேண்டும். பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களின் அதிகரிப்பானது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்தமைக்கு பிரதான காரணமாகும். பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் சிறு வயது கர்ப்பங்களை குறைக்க முடியும். 

- நதியா ராமையா

திட்ட உதவியாளர்

“எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பு” - PEaCE

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்