Paristamil Navigation Paristamil advert login

என் டைகருக்கும் சில வைக்கணும்

என் டைகருக்கும் சில வைக்கணும்

27 தை 2022 வியாழன் 12:21 | பார்வைகள் : 9811


சுவிச்சர்லாந்து நாட்டிலெ ஒரு ரயில் நிலையத்தில நாய்க்குச் செல வச்சிருக்காங்கற செய்தி கேட்டப்பே என்னோட டைகரைப் பத்தி நெனக்காம என்னாலெ இருக்க முடியல.

 
டைகரை எப்பப்பெல்லாம் நான் நெனக்றனோ அப்பப்பெல்லாம் எனக்கு அழுகையும் வரும்.
 
அப்போ எனக்குப் பத்து வயசிருக்கும். நானும் என்னோட நண்பர்களும் பேசிட்டிருந்தோம்.
"டேய் இன்னைக்கு என்னடா பண்ணலாம்? "
"மரமேறி வெளையாடலாமா? " முத்துமணி கேட்டான்.
 
"வேண்டாண்டா கிரிக்கெட் வௌயாடாலாம " இப்ராஹிம் சொன்னான்.
 
"எத்தனை நாள்தாண்டா கிரிக்கெட் வௌயாடறது. கிரிக்கெட்டுக்கு லீவு விட்டுறுவோம். இப்ப நல்ல வெயிலா இருக்கு. நம்ம கொளத்திலெ தண்ணியும் நெறஞ்சிருக்கு. குளிக்கப் போலாமாணு" நான் கேட்டேன்.
 
"கொளக்கரயிலெ வேப்பமரமும் இருக்கு. மரத்திலெயும் ஏறலாம் தண்ணிலெயும் குதிக்கலாம்" முத்துமணி சொன்னான்.
 
ஆகா நல்ல யோசனை... எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. நாங்க கொளத்தைப் பாத்து நடக்கத் தொடங்கினோம்.
 
அப்ப டைகரு எல்லாத்துக்கு முன்னாலே வழிகாட்டியெப்போல் நடந்திச்சு.
 
துணிமணியெல்லாம் கழட்டி வச்சிட்டு வேப்பமரத்திலெ தாவிப்புடிச்சு ஏறினோம் தொப்புண்ணு தண்ணிலெ குதிச்சோம். தண்ணீ எல்லாப் பக்கம் சிதறிச்சு.
 
அப்படியே தணிக்குள்ளே போயிருவோம். மூச்சுப் புடுச்சிட்டு வெளியே வருவோம். படிக்கட்டு வழியா ஏறிப்போயி மறுபடியும் மரத்திலே ஏறி... தொப்புண்ணு குதிப்போம். கொஞ்ச நேரம் தண்ணிலெ மல்லாந்து படுப்போம். மறுபடிம் படிக்கட்ல ஏறிப்போயி வேப்பமரத்திலேறி... எத்தன நேரம்தான் இப்படி வௌயாடினோம்ணு தெரியாது. டைகர் மரத்தடிலெ படுத்துகிட்டு எங்கள வேடிக்கை பாத்திட்டிருந்திச்சு.
 
குளிச்சுக் குளிச்சு எங்க கண்ணெல்லாம் செவந்து போச்சு. டேய் போதும்டா.. பசி வயித்தைக் கிள்ளுது. வாங்கடா போலாம். அம்மா வேற சாப்பாட்டை வச்சிட்டுக்கு காத்திட்டிருக்கும். இப்ராஹிம் சொன்னான்.
 
ஒடம்பெல்லாம் ஒரே அசதியா இருந்ததுச்சு. இல்லாட்டி குளிச்சிட்டே இருக்கலாம். எல்லாரும் படிக்கட்டு வழியா ஏறி கரைக்கு வந்தோம். துணிமணிகளை மாட்டிக்கிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட தயாரானோம். அப்போ சட்ணு டைகர் ஓடி வந்து குறுக்கே நிண்ணுகிச்சு.
 
நான் காலெடுத்து வச்சா என்ன பாத்துக் கொறக்குது. ஏய் டைகர் வீட்டுக்குப் போகலாம் வா.. அப்டீண்ணா அது வரமாட்டேங்குது. அதோட காதைப்புடிச்சு இழுத்தாலும் நிண்ண எடத்திலிருந்து அசைய மாட்டேங்குது.
 
"''டேய் என்னடாச்சு உன் நாய்க்கு'' அப்படீண்ணு நண்பர்கள் எல்லாம். டைகர ஒரு மாதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க.
 
எனக்கும் ஒரு மாதிரியாயிருச்சு. நீ வரலேண்ணா போ நா போறேணு சொல்லிட்டு நாலு எட்டு வச்சேன் டைகரு ஓடி வந்து என் டிரவுசரக் கடிச்சு இழுத்துச்சு. அப்படி இழுத்ததில என் டிரவுசரு கிழிஞ்சும் போச்சு. குளிக்கக் கொண்டு வந்து துண்ட எடுத்துக் கட்டிக்கிட்டேன்.
 
'''டேய, உன் டைகருக்கு வெறிபுடிச்சிருச்சிடா அப்படீண்ணு சொல்கிட்டே பக்கத்தில கெடந்த ஒரு கல்லெடுத்து குறி பாத்து எறிஞ்சான் முத்துமணி. அந்தக் கல்லு சரியா டைகரோடு நெத்திலெ பட்டுச்சு. ரத்தம் கொட்டுது.
 
என்னடா இப்படி பண்ணீட்டே... அப்படீண்ணு நான் அவங்கிட்ட சண்டைக்குப் போய்ட்டேன்.
 
டைகரை முத்துமணிப் பாத்து "பெள பெள" ண்னு குறச்சுகிட்டு பாஞ்சு வந்தது. அவன் பயந்து ஒரே ஓட்டமா ஓடிட்டான்.
 
அதபாத்தப்போ முத்துமணி சொன்னது சரியோ அப்படீண்ணு எனக்கும் தோணிச்சு.
 
அது பேசாம அந்த வேப்பமரத்தடியலே போய் படுத்துகிச்சு. நானும் வருத்தத்தோட வீட்டுக்குப்போனேன். அம்மா எனக்குச் சாப்பாடு போட்டாங்க எனக்கு சாப்பிடறதுக்கே மனசில்ல. இருந்தாலும் அம்மா கோவிச்சுக்கு வாங்களேண்ணு நெனச்சு சாப்பிட உக்காந்தேன்.
 
டேய் உங் கழுத்திலெ கெடந்த தங்கச் சங்கலி எங்கடாண்ணு அம்மா கேட்டாங்க.
 
அப்பத்தான் குளிக்குப்போகும்போது செயினைக் கழட்டி மரத்தோடு ஒரு கொம்பில மாட்டினது ஞாபகத்துக்கு வந்தது.
 
சாப்பிட உக்காந்தவன் சாப்பிடாம அப்படியே எந்திருச்சு ஒரே ஓட்டமா குளத்துக்குப் போனேன். அங்க அந்த வேப்பமரத்தடியில என் தங்கச் சங்கிலிக்கு காவலா டைகரு படுத்திருக்கு.
 
நான் போய் அந்தச் செயினை எடுத்து கழித்தில போட்டதும். அது போசாம வீட்டைப் பாத்து நடக்கத் தொடங்கிச்சு.
 
எனக்கு அழுகை அழுகையா வந்திச்சு. வீட்டுக்கு வந்ததும் அதோடு நெத்தியை தொடச்சுவிட்டு மருந்து வச்சு கட்டுப்போட்டேன். கொஞ்ச நாள்லே காயம் குணமாயிருச்சு. பழையபடி நாங்க விளையாடத் தொடங்கீட்டோம்.
 
அப்படி இருக்கும்போது நாங்க வீடு மாறினோம். இப்போ ரோட்டோரமா இருக்குது எங்க வீடு. எங்க வீட்டுக்குப் பக்கத்திலெ வாடைக சைக்கிள்கட ஒண்ணு இருக்குது. ஆகா சைக்கிள் பழகலாம்ணு சின்னச் சைக்கிள் எடுத்து எடக்கால் போட்டு ரோட்லெ ஓட்டிப் பழகினேன். டைகரும் கூட வரும். அது முன்னாலே போகும் நான் அதுக்குப் பின்னாலே போவேன்.
 
எடக்கால் போட்டது போதும் எல்லாரும் ஓட்டற மாதிரி நாமளும் ஓட்டலாம்ணு காலே எடுத்து மேலே போட்டு சைக்கிள் ஓட்டினேன். மொதப் பழக்கம் பாருங்க. சைக்கிள் இப்படியும் அப்படியும் ஆடிச்சு. நான் தடுமாறி கீழே விழப்போறேன்.
 
எனக்குப் பின்னால ஒரு காரு வேகமா வந்திட்டிருக்குது. நான் கீழே விழந்திட்டேன். காரோட டிரைவரு ப்ரேக் போட்டாரு. ஆனா காரு நிக்காம வருது. அப்ப என் டைகரு ஓடி வந்திச்சு. எனக்கும் காருக்கும் நடவுலே புகுந்திச்சு. காரோடு சக்கரம் என் கண் முன்னாலே டைகரோட ஒடம்பு மேலே ஏறுது. டைகரு அந்த எடத்திலே துடிதுடிச்சு சாகுது. காரு எம்மேல முட்டிச்சு முட்லங்கற மாதிரி வந்து நிண்ணுச்சு. அன்னைக்கு என் டைகரு காருக்கு முன்னாலே குதிக்காம இருந்திருந்தா இன்னைக்கு இந்தக் கதை சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன்.

வர்த்தக‌ விளம்பரங்கள்