Paristamil Navigation Paristamil advert login

திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க, இப்படி இருங்க....

திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க, இப்படி இருங்க....

10 வைகாசி 2013 வெள்ளி 05:55 | பார்வைகள் : 9568


 திருமணம் என்று வீட்டில் பேச்சை எடுத்தாலே, சிலர் முகத்தில் சந்தோஷம் இருக்கும். ஆனால் சிலருக்கோ கோபம் வரும். ஏனெனில் எப்படி தெரியாத ஒருவருடன் சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்து பலரது மனதில் இருக்கும். உண்மையில் திருமணம் என்பது அழகான ஒரு உறவை, வாழ்க்கை முழுவதும் தம்முடன் அழைத்துச் செல்வது ஆகும். இந்த உலகில் யாருமே பிறக்கும் போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பிறக்கவில்லை. 

 
எதுவுமே பழகப் பழகத் தான் புரியும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் விவாகரத்தானது எளிதில் நடைபெறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் என்று சொன்னால், நல்ல புரிதல் இல்லை என்பதை விட, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வாழ்க்கையில் நல்லது, கெட்டது இருக்கத் தான் செய்யும். அத்தகையவற்றை சரியாக நடத்த தெரியாதவர்கள் தான், விவாகரத்து வரை வருவார்கள். 
 
ஆனால் வாழ்க்கையை தமக்கேற்றவாறு பலர் மாற்றி அமைத்துக் கொண்டு, சந்தோஷமான வாழ்க்கையை பலர் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக, நமது தாய், தந்தையையே எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்குள் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அவர்களது நல்ல புரிதல், நம்பிக்கை, அகம்பாவம் இல்லாத தன்மை போன்றவை அவர்களை எத்தனை வருடங்கள் சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறது. ஆகவே அவ்வாறு சந்தோஷமான வாழ்க்கை அமைய என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று அனுபவசாலிகளிடம் கேட்டு அவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி சந்தோஷமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
 
புரிதல் வெவ்வேறு குணம் கொண்ட தம்பதிகள் சந்தோஷமாக இருப்பதற்கு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தன் துணைக்கு பிடித்தது, பிடிக்காதது என அனைத்தையும் தெரிந்து கொண்டு, அவர்களை புரிந்து வாழ வேண்டும். இவ்வாறு இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
 
மனம் விட்டு பேசவும் எப்போதும் துணையிடம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வது, வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச் செல்லும். அதை விட்டு மனதில் வைத்துக் கொண்டே இருந்தால், அது மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி, சில சமயங்களில் இருவருக்கிடையே தேவையில்லாத சண்டையை ஏற்படுத்தும்.
 
துணையின் குடும்பத்திடம் அன்பு செலுத்துதல் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தை, தம் குடும்பம் போன்று நினைத்து, அவர்கள் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்தினால், துணைக்கு நம்மீது அன்பு அதிகரித்து, வாழ்க்கை இனிமையானதாக மாறும்.
 
துணையின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கவும் துணையாக இருப்பவரின் எண்ணம் மற்றும் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபாடு அதிகம் இருந்தால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்தால், அது இருவரது நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.
 
மரியாதை கொடுக்கவும் வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு துணையை மரியாதையுடனும், வாழ்க்கையின் முக்கியத்துவமிக்கவராக நடத்துவதும் மிகவும் இன்றியமையாதது. இதுவரை இருவரது கருத்துக்கள் மற்றும் முன்னுரிமைகள் வெவ்வேறாக இருந்தாலும், திருமணத்திற்கு பின் துணையாக வருபவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்களில் தவறாமல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
 
சரியாக பேச்சு திருமண வாழ்க்கையை சந்தோஷமாக இட்டு செல்வதில் பேச்சு தொடர்பு ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. உதாரணமாக, இருவரும் ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும் போது, ஒருவர் மற்றவர்களது கருத்துக்களை கவனிக்க வேண்டும். மேலும் சொல்வதை சரியாக தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டு, பேசிக் கொண்டிருக்கும் போது, பிடிக்கவில்லை என்பதற்காக இடையில் எழுந்து செல்லக்கூடாது. இது எரிச்சலை உண்டாக்கி, வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
 
உண்மையாக இருக்கவும் திருமண வாழ்க்கையின் போது உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது வாழ்க்கையை சந்தோஷமாக வைக்கும். உதாரணமாக, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று சொன்னால், அதில் ஒரு உறுதி, அன்பு, உண்மை போன்றவற்றை துணையில் மனதில் பதியுமாறு சொல்ல வேண்டும்.
 
நேரத்தை ஒன்றாக செலவழிக்கவும் தற்போதைய வாழ்க்கையில் பெரும்பாலான தம்பதிகள் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு, தனித்தனியான இடத்திலோ அல்லது இருவரும் சந்திக்க முடியாதவாறு வேலை செய்து பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் அத்தகையது வாழ்க்கையை நடத்துவதற்கு பணத்தை மட்டும் தான் தருமே தவிர, சந்தோஷத்தை தராது. சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டுமெனில், எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும், சிறிது நேரமாவது வேலையை ஒதுக்கிவிட்டு, இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட வேண்டும்.
 
பொறுமை அவசியம் புதிய மனிதருடம் வாழும் போது, அவர்களை அனுசரித்து செல்வது என்பது சற்று வித்தியாசமாக இருக்கும். ஏன் பிடிக்காததைக் கூட செய்யலாம். அந்நேரத்தில் நிறைய கோபங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படும். ஆனால் அப்போது பொறுமையாக இருந்து, அவர்களை புரிந்து காதலித்தால், வாழ்க்கை சூப்பராக இருக்கும்.
 
முடிவுகளை ஒன்றாக எடுக்கவும் ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்திற்கு முடிவு எடுக்க வேண்டுமெனில், துணைவருடன் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். இது இருவருக்கிடையே சண்டைகள் மற்றும் விவாதங்கள் உண்டாவதைத் தடுக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்