Paristamil Navigation Paristamil advert login

தக்காளி ஊத்தாப்பம்

தக்காளி ஊத்தாப்பம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9784


 பொதுவாக தோசையை தான் பலர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் அந்த தோசையை சற்று தடிமனாக ஊற்றினால், அதனையே ஊத்தாப்பம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் இது தடிமனாக இருப்பதாலேயே. ஆனால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை பயன்படுத்தி, ஊத்தாப்பம் செய்து கொடுத்தால், அனைவருமே ஊத்தாப்பத்தை விரும்பி சாப்பிடுவர். இப்போது அவற்றில் ஒருவகையான தக்காளி ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
இட்லி மாவு - 4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
கேரட் - 1/2 கப் (துருவியது) 
பட்டாணி - 1/2 கப் 
தக்காளி - 1/4 கப் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது) 
இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை:
 
முதலில் இட்லி மாவில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். 
 
கல்லானது சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று, ஆனால் சற்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் நறுக்கிய காய்கறிகளை தூவி, எண்ணெய் ஊற்றி, பின் மூடி வைத்து மூட வேண்டும். 2-3 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, மறுபக்கம் திருப்பி போட்டு 1 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். 
 
இப்போது சுவையான தக்காளி ஊத்தாப்பம் தயார்!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்