Paristamil Navigation Paristamil advert login

பிரேசில் சாலையில் உள்ள பள்ளம் - $48 மில்லியன் அபராதம் விதித்த நீதிபதி

பிரேசில் சாலையில் உள்ள பள்ளம் - $48 மில்லியன் அபராதம் விதித்த நீதிபதி

18 மாசி 2024 ஞாயிறு 15:16 | பார்வைகள் : 1987


2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது.

இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர்.

23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லாரிகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்திற்கு காரணமானவர்கள் என கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா (Marcos de Lima Porta) தீர்ப்பை அறிவித்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

இவ்வளவு பெரிய கட்டுமானத்தில் தாங்கி பிடிக்கும் தூண்கள் உருவாக்க வேண்டும் என வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயலை விரைவாக முடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அவசரகதியில் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் பணியாற்றி உள்ளார்கள். 

இந்த விபத்திற்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தனது தீர்ப்பில் ரூ.4,00,96,84,875.00 ($48.3 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, மெட்ரோ நிறுவன அதிபர், ஒரு பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உட்பட 6 பேரும், 6 நிறுவனமும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2018ல் உயிரிழந்து விட்டார். ஆனாலும், அவரது வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்