ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
![ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு](ptmin/uploads/news/India_rathna_stalin-cm.jpg)
28 ஆனி 2024 வெள்ளி 03:03 | பார்வைகள் : 270
சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
அனைத்து மாவட்டங்களிலும், தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி துறையில், ஓசூர் கடந்த சில ஆண்டுகளில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரை, தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க, ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் நிலையில் உள்ளது.
ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என, அரசு கருதுகிறது.
எனவே, ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 லட்சம் பயணியரை கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த, மாபெரும் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், கருணாநிதி பெயரில் அமைக்கப்படும்.
இது, பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியப் பகுதியில், ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.