Paristamil Navigation Paristamil advert login

பார்லிமென்டில் இன்று 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

பார்லிமென்டில் இன்று 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

24 ஆடி 2024 புதன் 05:19 | பார்வைகள் : 878


மத்திய பட்ஜெட் பாரபட்சமானது என கூறி, பார்லிமென்ட்டில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக, 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பீஹார், ஆந்திராவுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் சபைக்குள் குரல் எழுப்பினர். தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் எம்.பி.,க்கள் பலர், 'எங்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே இல்லையா' என, சத்தமாக கேட்டனர்.

குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்குவதாக அமைச்சர் கூறியபோது, தமிழக எம்.பி.,க்கள் எழுந்து கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள், 'இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்' என விமர்சித்தனர். இந்நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

அதில், மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பீஹாரையும் ஆந்திராவையும் தவிர்த்து பிற மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, பார்லிமென்ட் நுழைவு வாயிலில் இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதேபோல், வரும் 27ல் நடக்கவுள்ள 'நிடி ஆயோக்' கூட்டத்தில் காங்., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்