பிரித்தானிய நகரமொன்றில் திடீர் அவசரநிலை பிரகடனம்

19 ஆவணி 2024 திங்கள் 05:31 | பார்வைகள் : 5973
வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டிலிருந்து 9 மைல் கிழக்கே அமைந்துள்ள Newtownards பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தகவலை அடுத்து சம்பவப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் 400 மீற்றர் சுற்றளவில், வசிக்கும் மக்கள் வெளியேற்றவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 450 குடியிருப்புகளில் உள்ள மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சூழ்நிலை சிக்கலாக உள்ளது என்றும் உள்ளூர் கவுன்சிலர் பீட் வ்ரே உறுதிப்படுத்தியுள்ளார்.
குறைந்தது 5 நாட்கள் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், ராணுவத்தில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு என அவசர உதவி மையம் ஒன்றும் அமைக்கபப்ட்டு, உதவிகள் முன்னெடுக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை பகல் 10 மணிக்கு அப்பகுதி மக்களை வெளியேற்றத் தொடங்கினர்.
இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் ராணுவ அதிகாரிகள் உட்பட, பல்வேறு அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டானது தற்போதும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.