Paristamil Navigation Paristamil advert login

மக்களை பிளவுபடுத்தாத பொதுசட்டம்

மக்களை பிளவுபடுத்தாத பொதுசட்டம்

16 ஆவணி 2024 வெள்ளி 02:57 | பார்வைகள் : 518


நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தாத, மதச்சார்பற்ற பொது சட்டம் உடனடியாக தேவை, என, பிரதமர் மோடி நேற்று தன் சுதந்திர தின உரையில் வலியுறுத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து, பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:

அரசியலில் இளைஞர்கள்: அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக குடும்ப அரசியல் பின்புலம் இல்லாதவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாரிசு, ஜாதிய தீமைகளை எதிர்த்து போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, எங்காவது தேர்தல் நடக்கிறது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்கள் துாக்கிலிடப்படுவர் என்பதை தெரியப்படுத்த வேண்டும். இது, இச்செயலில் ஈடுபட நினைப்போருக்கு

அச்சத்தை ஏற்படுத்தும்.

மதச்சார்பற்ற சிவில் சட்டம்: தற்போதுள்ள சிவில் சட்டம், மத ரீதியிலானது என்று மக்கள் நம்புகின்றனர். இந்த சட்டத்துடன் தான், 75 ஆண்டுகள் பயணித்துள்ளோம்; இது, பாகுபாட்டை ஊக்குவிக்கும் சட்டமாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டை பிரித்து, சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது.

மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி உடனடியாக பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தான், அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சம். உச்ச நீதிமன்றம் இதன் அவசியத்தை பல முறை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவு நிறைவேற்றப்பட வேண்டும்.

2036ல் ஒலிம்பிக் போட்டி: வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது நம் கனவாகும். ஜி - 20 மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியதையடுத்து, இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளோம்.


காலநிலை உடன்படிக்கை


* பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட காலநிலைக்கான இலக்குகளை நாம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அடைந்து விட்டோம். ஜி - 20 நாடுகளில் அவ்வாறு செய்த ஒரே நாடு இந்தியா மட்டுமே.


வங்கதேச நிலவரம்


* நம் நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது கவலை அளிக்கிறது. அங்கு ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.


உள்நாட்டில் மருத்துவ கல்வி


* அடுத்த ஐந்து ஆண்டுகளில், மருத்துவ கல்வியில், 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும். இதன் வாயிலாக நம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க வேண்டிய தேவையிருக்காது.


வளர்ந்த பாரதம்


* 'வளர்ந்த பாரதம் 2047' என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. அன்று, 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினர். தற்போதுள்ள, 140 கோடி பேர், நாட்டை வல்லரசாக்க உழைக்க வேண்டும்.

விரைவான நீதி வழங்குவதை புதிய கிரிமினல் சட்டங்கள் உறுதி செய்கின்றன. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் தகர்த்து எறியப்படும். நீதி, நேர்மை ஆகியவற்றின் உதவியுடன் வளர்ச்சி எட்டப்படும்.

பிரதமர் மோடி தன் உரையில், பெண்களுக்கானசம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறையை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்தி உள்ளோம். ''பேறுகால விடுமுறையை உயர்த்துவது என்பது பெண்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. மேலும், தாயின் அரவணைப்பில் குழந்தை கள் இருப்பது, சிறந்த குடிமகன்களை உருவாக்கும். வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆதரவாக மனிதாபிமானத்துடனும், அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் நாம் அணுக வேண்டும்,'' என, அவர் குறிப்பிட்டார்.

யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக, பல நீதிமன்றங்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளன.

நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 2019ல் ஒரு வழக்கில், யு.சி.சி., அமல்படுத்துவதில் தாமதம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த, 2003ல், அப்போதைய தலைமை நீதிபதி வி.என்.கரே ஒரு வழக்கின்போது, அரசியலமைப்புச் சட்டத்தின், 44வது பிரிவின்படி, நாகரிக சமூகத்தில், மத ரீதியிலான சட்டங்கள் மற்றும் தனிநபர் சட்டங்கள் தேவையில்லை என்பதை குறிப்பிட்டார். கடந்த, 2015ல், நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தனி நபர் சட்டங்களால் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், யு.சி.சி., அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்தாண்டு ஜூலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'மதங்கள் மற்றும் நம்பிக்கை என்ற போர்வையில், அடிப்படைவாதம், பழமைவாதம், அதீத நம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது. யு.சி.சி., என்பது காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது, உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும்' என்று கூறியது.

அலகாபாத் உயர் நீதிமன்றம், 2021 நவம்பரில், அரசியலமைப்புச் சட்டத்தின், 44வது பிரிவை நடைமுறைபடுத்தும்படி, மத்திய அரசுக்குஉத்தரவிட்டிருந்தது. டில்லி உயர் நீதிமன்றமும், 2021ல் இதே கருத்தை தெரிவித்திருந்தது.யு.சி.சி., அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை அமல்படுத்த காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என, கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.


6,000 சிறப்பு விருந்தினர்கள்

நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், எல்லை சாலை கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், பழங்குடியின தொழில்முனைவோர், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, 6,000 பேருக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர்கள் நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்