செனெகலின் கரையோர பகுதியில் படகில் மீட்க்கப்பட்ட 30 சிதைந்த உடல்கள்
24 புரட்டாசி 2024 செவ்வாய் 14:06 | பார்வைகள் : 1966
ஐரோப்பிய நாடுகளுக்க கடல் மார்க்கமாக புலம்பெயர்ந்த மக்கள் பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.
இவ்வாறான பயணங்களின் போது மக்கள் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செனெகலின் கரையோர பகுதியில் மரப் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது.
தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.
செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலே இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
படகில் இருந்த உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது குடியேற்றவாசிகள் பல நாட்களாக அட்லண்டிக் சமுத்திரத்தில் மிதந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகு எப்போது எங்கிருந்து புறப்பட்டது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.