Paristamil Navigation Paristamil advert login

பார்லி.,யில் தாக்குதல் ! குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

பார்லி.,யில் தாக்குதல் ! குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

9 புரட்டாசி 2024 திங்கள் 01:36 | பார்வைகள் : 522


பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது வண்ண புகை குண்டுகளை வீசிய குற்றவாளிகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி, உலக அளவில் உடனடியாக கவனம் பெறுவதற்காகவே அந்த தாக்குதலை நடத்தியதாக, போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் வளாகத்திற்குள், கடந்த 2001ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாள் ஆண்டுதோறும் டிச., 13ல் அனுசரிக்கப்படுகிறது. கடந்த டிச., 13ல் லோக்சபாவுக்கு உள்ளேயும், வெளியேயும், வண்ண புகை குண்டுகளை வீசியதுடன், நாட்டுக்கு எதிராகவும் சிலர் கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, கர்நாடகாவை சேர்ந்த மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இவர்களுக்கு உதவிய லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோரை இரு தினங்களுக்கு பின் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரும், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் 1,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், குற்றவாளிகள் ஆறு பேரும், சமூக வலைதளம் வாயிலாக அறிமுகம் ஆனதாகவும், பார்லி., தாக்குதல் குறித்து இரண்டு ஆண்டுகள் அவர்கள் திட்டமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து முறை அவர்கள் சந்தித்து பேசியதும், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி, உலக அளவில் உடனடி கவனத்தை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்