மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டுகால சிறை! - அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா..??!!

16 கார்த்திகை 2024 சனி 08:27 | பார்வைகள் : 7584
Rassemblement national அரசியல் கட்சியின் தலைவர் மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது.
பாராளுமன்ற உதவியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு சட்டத்துக்கு புறப்பான விதத்தில் ஊதியம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவது அறிந்ததே. இந்நிலையில், பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும், ஐந்து ஆண்டுகள் தகுதியற்ற கால தண்டனையும், 300,000 யூரோக்கள் குற்றப்பணமும் கோரியுள்ளது.
இதில் தகுதியற்ற காலத்தண்டனை என்பது, அவர் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதைக் குறிப்பதாகவும். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் மற்றும் ஜனாதிபதி ஆகும் கனவு இரண்டுக்கும் வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் மரீன் லு பென் தெரிவிக்கையில், ”இது அரசியல் மரணதண்டனை” என தெரிவித்துள்ளார்.
”எனக்கு எதிராக தற்காலிக மரண தண்டனையும்.. அரசியல் பணிக்கு நிரந்தரமான மரண தண்டனையும் கோருகின்றனர். இதுவரை எந்த அரசியல்வாதிக்கும் இவ்வாறான குற்றப்பத்திரிகை வாசித்ததில்லை. அது இவ்வாறான தண்டனையை கோரியதும் இல்லை!” என அவர் மேலும் குறிப்பிட்டார்.