Paristamil Navigation Paristamil advert login

இந்தியா-சீனா எல்லை ரோந்துக்கு உடன்பாடு

இந்தியா-சீனா எல்லை ரோந்துக்கு உடன்பாடு

22 ஐப்பசி 2024 செவ்வாய் 01:25 | பார்வைகள் : 148


எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இன்று துவங்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரதமர் மோடி புறப்படும் நேரத்தில், முக்கியமான இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீன அதிபரும் மாநாட்டுக்கு வருவதால் அவரும், மோடியும் பேச்சு நடத்த வாய்ப்பு உருவாகி இருக்கிறது.


சீன அதிபர் ஷீ ஜின் பிங்கும், நம் பிரதமர் மோடியும் 2020க்கு முன், 18 முறை சந்தித்து பேசியுள்ளனர். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீனப்படை நடத்திய திடீர் தாக்குதலுக்கு பின், இரண்டு தடவை மட்டுமே சந்தித்துள்ளனர்.

அதுவும் இந்தோனேஷியாவில் 2022ல் நடந்த ஜி-20 மாநாடு மற்றும் தென் ஆப்ரிக்காவில் 2023ல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நடந்த சந்திப்புகளே.


திடீர் தாக்குதல்

சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதனால், எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. பதிலாக, எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ரோந்து படை மீது, சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. நம் வீரர்கள் எதிர்த்து தாக்கினர். மோதலில், 20 இந்திய ஜவான்கள் உயிரிழந்தனர்.

அதை காட்டிலும் இரு மடங்கு சீன வீரர்களும் பலியாகினர். இதையடுத்து, இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. இரு தரப்பு உறவில், 45 ஆண்டுகள் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது; அரசியல், சமூக, பொருளாதார உறவிலும் பெரும் தாக்கம் உண்டானது.

எனினும், பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பது தான் இரு நாடுகளுக்கும் நல்லது என்பதை இரு தரப்பும் உணர்ந்துள்ளதால், பேசுவதை நிறுத்தவில்லை.

ராணுவ அளவிலும், வெளியுறவு அமைச்சக அளவிலும் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வந்தனர். 2020 மோதலுக்கு முன், இரு நாட்டு ராணுவமும் எதுவரையில் ரோந்து சென்றனவோ, அதே நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக நின்றது.

சீனாவோ மேற்படி சண்டையை தொடர்ந்து, நம் பகுதிக்குள் ஊடுருவிய நிலப்பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என பிடிவாதமாக இருந்தது. அந்த இடங்களில் தாறுமாறாக கட்டுமானங்களையும் மேற்கொண்டது.

இந்தியாவும் பதிலுக்கு எல்.ஏ.சி.,யை ஒட்டிய இடங்களில் சாலை அமைப்பது, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பு காட்டியது.

இதை எதிர்பார்க்காத சீனா, மெல்ல மெல்ல இறங்கி வந்தது. எல்.ஏ.சி., பகுதியில் ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பாக மட்டும் பிரச்னை நீடித்தது.

கடந்த நான்கு ஆண்டு களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு துாதரக ரீதியில் 31 சுற்று, ராணுவங்களுக்கு இடையே 21 சுற்று பேச்சு நடந்தது. அதன் விளைவாக இப்போது, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த அளவில் இரு தரப்பும் ரோந்து செல்லலாம் என உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது.

எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்ல இந்த உடன்பாடு ஒரு துவக்கமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறியதாவது:மிகவும் முக்கியமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.


இடைவிடாத முயற்சி

ரஷ்யாவில் சீன அதிபரை, பிரதமர் மோடி சந்தித்து பேசுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும்.இவ்வாறு மிஸ்ரி கூறினார்.

''இது மிகச் சிறந்த மற்றும் நேர்மறையான முன்னேற்றம். படைகளை விலக்கிக் கொள்ளும் விஷயத்தில் நம் முயற்சிகள் முழுமை அடைந்துள்ளன,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திருப்தி தெரிவித்துள்ளார்.

''இடைவிடாத முயற்சியால் இது சாத்தியமாயிற்று. பங்கேற்றவர்களில் சிலர் இது சாத்தியமில்லை என பல கட்டங்களில் வெறுத்துப் போயினர். ஆனாலும் நம் நிலைப்பாடு என்ன என்பதை பொறுமையாக, அதே சமயம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்தோம். ரோந்து பணியை பொறுத்தவரை 2020ல் இருந்த நிலையே மீண்டும் தொடரும்,” என்றார் அவர்.

இந்தியாவுடன் பொருளாதார உறவு பலப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. அதன் சர்வதேச அரசியல் ஆதிக்க முயற்சிகளுக்கு தடை போடும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது என்றும் நினைக்கிறது.

“ஆனால், எல்லையில் அமைதியை சீர்குலைத்து விட்டு, மற்ற இடங்களில் உறவை எப்படி வலுவாக்க முடியும்? என நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம்,” என்று வெற்றி ரகசியத்தை ஜெய்சங்கர் திரைநீக்கி காட்டினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்