அவதானம்.. தரிப்பிடக்கட்டணம் செலுத்தாத வாகனங்களை கண்காணிக்கும் நடமாடும் கருவி..!!

8 தை 2025 புதன் 15:00 | பார்வைகள் : 5964
கட்டணங்களை செலுத்தாமல் தரிப்பிடங்களை பயன்படுத்தும் மகிழுந்துகளை கண்காணிக்க காவல்துறையினர் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மகிழுந்து ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்ட கமராக்கள் மற்றும் ’சென்சார்கள்’ வீதிகளில் உள்ள மகிழுந்துகளை மிக விரைவாக அடையாளம் காணும் சிறப்பு கொண்டது. குறித்த மகிழுந்தை வீதியில் செலுத்துவது மூலம் தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாகவும், ஒரே நேரத்தில் பல வாகனங்களையும் கண்காணிக்க முடியும் எனவும்,
இலக்கத்தகடுகளை அடையாளம் கண்டு, அந்த வாகனத்துக்கு தரிப்பிடக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா எனவும் தெரிந்து, தானாகவே குற்றப்பணம் அறவிடும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Villeurbanne (Rhône) நகரில் இந்த மகிழுந்தை தொடர்ச்சியாக பார்க்கமுடியும். நாள் ஒன்றில் 5,000 இற்கும் மேற்பட்ட மகிழுந்துகளை இது கண்காணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் கண்காணிப்பு மகிழுந்து பரீட்சாத்தமாக இயக்கப்படுவதாகவும், இதில் 1% சதவீதம் மட்டுமே ‘பிழை’ ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியளித்தால் விரைவில் தலைநகர் பரிசுக்குள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.