Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தமிழகம் திரும்புது காற்றழுத்த தாழ்வு பகுதி

மீண்டும் தமிழகம் திரும்புது காற்றழுத்த தாழ்வு பகுதி

23 மார்கழி 2024 திங்கள் 02:52 | பார்வைகள் : 4904


வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 24ல் தமிழக வட மாவட்டங்களின் கடலோர பகுதி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி வரக்கூடும்.

இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழக வட மாவட்டங்களின் கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்