Paristamil Navigation Paristamil advert login

கைதான ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்; ஆதாரங்களை வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

கைதான ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்; ஆதாரங்களை வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

26 மார்கழி 2024 வியாழன் 02:38 | பார்வைகள் : 2960


அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை இரு மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பிரியாணி கடை நடத்தி வருவதும், ஏற்கனவே, மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் பற்றிய புது விபரங்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் தி.மு.க.,வின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.

1. ஒரு குற்றவாளி, தி.மு.க.,வில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி தி.மு.க., நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.

2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.

3. அந்தந்த பகுதி தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க தி.மு.க., அரசே பொறுப்பு.

எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் கைதான ஞானசேகரன் இருக்கும் போட்டோக்களையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்