'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை.. காரணம் என்ன ?
4 மாசி 2025 செவ்வாய் 14:09 | பார்வைகள் : 215
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "கபாலி" திரைப்படத்தை தமிழில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி. இந்நிலையில், அவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.பி. சவுத்ரி கோவாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரின் அறை கதவு வெகு நேரமாக திறக்காமல் இருந்ததால், அருகில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில், இது தற்கொலை என்று காவல்துறையினர் கூறினாலும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர்கள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, போதைப்பொருள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.