Paristamil Navigation Paristamil advert login

வரலாற்றை அழிக்க முயற்சி: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு

வரலாற்றை அழிக்க முயற்சி: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு

6 மாசி 2025 வியாழன் 15:31 | பார்வைகள் : 3110


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறது, என டில்லியில் தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் யு.ஜி.சி., வரைவு விதிகளை திருத்தம் செய்ய தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது., யு.ஜி.சி., விதிகளை திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல, காங்., வி.சி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். அப்போது, , பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது என நான் கூறிவருகிறேன். அதற்கு துவக்கப்புள்ளி இதுதான். தங்களின் ஒரே வரலாறு ஒரே பாரம்பரியம் ஒரே மொழி என்ற ஒரே கொள்கையை கொள்கையை அமல்படுத்த விரும்புவதால் தான் அரசியல்சாசனம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தங்களது கல்வி முறையை கொண்டு வருவதற்கான மற்றுமொரு முயற்சியே இது. இது போன்று பல போராட்டங்கள் நடத்த வேண்டும். ஏனென்றால், அந்த அமைப்பால் நமது அரசியலமைப்பு, மாநிலங்கள் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. தொழிலதிபர்களின் சேவகர்களாக அரசியல்வாதிகள் இருக்க விரும்புகின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க முடியாது. இக்கொள்கைக்கு எதிராகவும்,பா.ஜ.,விற்கு எதிராகவும் இருக்கிறேன். இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்