ஏப்ரல் 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்

22 பங்குனி 2025 சனி 14:43 | பார்வைகள் : 914
முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்தார்.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கை அதிபராக அனுரா திசநாயகே பதவியேற்றார். பின்னர் அவர், கடந்த டிசம்பர் மாதம், புதுடில்லிக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விருந்தளித்தார். மேலும் இரு நாட்டு தலைவர்களும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்தார். அவர், திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இந்தியப் பிரதமரின் வருகையின் போது தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பை பார்லிமென்டில் உரையாற்றும்போது அதிபர் அனுரா திசநாயகே கூறியுள்ளார்.
பிரதமரின் பயணம் குறித்து, சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறியதாவது: இலங்கையிலும் இந்தியாவிலும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பிரதமர் மோடியின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகாவாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை திருகோணமலையில் உள்ள சம்பூரில் தொடங்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார வாரியம் மற்றும் இந்திய தேசிய வெப்ப மின் கழகம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் நடக்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.