கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் தஞ்சம்; நாடு கடத்த இந்தியா தீவிரம்

23 பங்குனி 2025 ஞாயிறு 07:07 | பார்வைகள் : 1640
ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர். இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து விட்டது. மெஹூல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் வசித்து வருகிறார் என்ற தகவலை ஆன்டிகுவா வெளியுறவு அமைச்சர் மறுத்தார். அவரது மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.
அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும்.
இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக பெல்ஜியம் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.