Paristamil Navigation Paristamil advert login

ஆபரேஷன் சிந்தூர் ஏன்: யுஏஇ., அரசிடம் விளக்கிய இந்திய எம்.பி.,க்கள் குழு!

ஆபரேஷன் சிந்தூர் ஏன்: யுஏஇ., அரசிடம் விளக்கிய இந்திய எம்.பி.,க்கள் குழு!

23 வைகாசி 2025 வெள்ளி 09:54 | பார்வைகள் : 114


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவினர், ஆபரேஷன் சிந்தூருக்கு பிந்தைய நடவடிக்கை குறித்தும், பயங்கரவாத பாதிப்பு குறித்தும் அந்நாட்டு அரசிடம் விளக்கிக் கூறினர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும் நம் நிலைப்பாடு என்ன என்பதை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எம்.பி.,க்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், துாதர்கள் அடங்கிய ஏழு அனைத்து கட்சி குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றது. இக்குழுவில், பா.ஜ., எம்.பி.,க்கள் பன்சுரி சுவராஜ், அதுல் கார்க், ராஜ்ய சபா எம்.பி., மனன் குமார் மிஸ்ரா, எஸ்எஸ் அலுவாலியா, ஐயுஎம்எல் எம்பி., முகமது பஷீர், பிஜூ ஜனதா தள எம்.பி., சஸ்மித் பத்ரா இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் இன்று அபுதாபியில் அந்நாட்டு அமைச்சர் ஷேக் நஹ்யான் மபாராக் அல் நஹ்யனை சந்தித்து பேசினர். அப்போது, பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் சதி மற்றும் ' ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கினர்.

இச்சந்திப்பு தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரத்துறை தலைவர் அலி ரஷீத் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம். இந்தியர்களின் பாதுகாப்பு என்பதில் சமரசம் கிடையாது. இந்தியா எங்களின் பிராந்திய கூட்டாளி. அரசுடன் மட்டும் அல்ல. மக்களுடனும் தான்.

பயங்கரவாதம் என்பது மனிதநேயத்திற்கு விரோதமானது. அறிவார்ந்தவர்கள் இதனை எதிர்ப்பார்கள். அதற்கு எதிராக பேசுவார்கள். பயங்கரவாதத்திற்கு எந்த மதமும், நாடும் கிடையாது என்றார்.

இந்திய குழுவின் தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நன்கு தெரிந்துவைத்துள்ளது. மும்பை தாக்குதல், பதன்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் பல தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை அந்நாடு அறிந்து வைத்து உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் எந்த நாட்டிற்கும் ஆதரவாக இருக்க மாட்டோம் என தெரிவித்து உள்ளனர். அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

மேலும் இக்குழுவினர், அந்நாட்டின் தேசிய மீடியா அலுவலக இயக்குநர் ஜெனரல், ஜமால் முகமது ஒபியான் அல் கபியை சந்தித்து பேசினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்