திடீர் ஓய்வை அறிவித்த இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ்

23 வைகாசி 2025 வெள்ளி 14:50 | பார்வைகள் : 1282
இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ், அடுத்த மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "நான் விடைபெற வேண்டிய நேரமிது. கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை. நான் கிரிக்கெட்டிற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்.
கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இன்று நான் இருக்கும் நபராக என்னை மாற்றியுள்ளது. டெஸ்ட் வடிவத்திற்கு நான் விடைபெறுகிறேன்.
தேர்வாளர்களுடன் கலந்துரையாடப்பட்டபடி, என் நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், வெள்ளை பந்து வடிவத்திற்கான தேர்வுக்கு நான் தொடர்ந்து இருப்பேன்" என கூறியுள்ளார்.
இலங்கை அணியின் மூத்த ஆல்ரவுண்டர் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ளவர்.
இதுவரை 210 இன்னிங்ஸில் விளையாடியுள்ள மேத்யூஸ் 16 சதங்கள், 45 அரைசதங்களுடன் 8,167 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டைசதம் (200) அடங்கும்.
மேத்யூஸிற்கு இலங்கை கிரிக்கெட் பிரியாவிடை பதிவிட்டுள்ளது. அதில், "ஒரு நம்பமுடியாத டெஸ்ட் வாழ்க்கைக்கு நன்றி ஏஞ்சலோ மேத்யூஸ்! அறிமுகத்தில் இருந்து ஜாம்பவான் வரை உங்கள் மன உறுதி, வர்க்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் ஒரு தலைமுறையை நீங்கள் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்.
சூன் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் போட்டி, இலங்கைக்காக உங்கள் இறுதி சிவப்பு பந்து தோற்றத்தை குறிக்கும் - எங்கள் சிறந்த வீரர்களில் ஒருவருக்கு உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை அளிக்கிறோம்" என தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ், இலங்கை அணியை 34 போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். குறிப்பாக, 2014யில் ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது இன்னிங்சில் அவர் அடித்த 160 ஓட்டங்கள் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1