பரிஸ் இராணுவப் பள்ளியில் தீ விபத்து : 130 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு!

25 வைகாசி 2025 ஞாயிறு 16:35 | பார்வைகள் : 676
பரிஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவப்பள்ளியில் சனிக்கிழமை இரவு கடும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1:30 மணியளவில் ஆரம்பமான தீயை கட்டுப்படுத்த 130 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
தீ அலுவலக பகுதியில் இருந்து பரவி, நூறு சதுர மீட்டர் அளவிலான கூரைகளை பாதித்துள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல், இரண்டு தீயணைப்பு வீரர்கள் புகைமூட்டால் லேசாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"விரைவு மற்றும் தீவிர நடவடிக்கைகள் மூலம் அலுவலக மற்றும் கற்றல் கட்டிடத்தை பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்" என பரிஸ் தீயணைப்பு படை (BSPP) தெரிவித்துள்ளது. அதிகாலை 7:30 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், தளத்தை பாதுகாப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் நாள் முழுவதும் வேலை செய்துள்ளனர்.
இந்த இராணுவப்பள்ளி, 1751–1768 காலப்பகுதியில், Petit Trianon மற்றும் Place de la Concorde ஆகியவற்றின் வடிவமைப்பாளராக புகழ்பெற்ற Ange-Jacques Gabriel என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். இங்கு நபோலியன் போனபார்ட் (Napoléon Bonaparte) போன்ற தலைசிறந்தோர் கல்வி பயின்றனர். இந்த இடம் 1990 முதல் வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.
தீயின் காரணம் இன்னும் தெரியவில்லை; காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.