தெலுங்கானா ஆலை விபத்து: 9 பேர் நிலை கேள்விக்குறி

4 ஆடி 2025 வெள்ளி 06:36 | பார்வைகள் : 149
தெலுங்கானாவில், ரசாயன ஆலை வெடிவிபத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒன்பது பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராமில், 'சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ்' என்ற ரசாயன ஆலையில் கடந்த மாதம் 30ம் தேதி உலை வெடித்தது.
இதில், 38 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 35 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தின் போது பணியில் இருந்த ஒன்பது பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் பிற உடல் பாகங்களின் தடயவியல் ஆய்வறிக்கை கிடைத்தவுடன், இறப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய, இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி டாக்டர் பி.வெங்கடேஸ்வர ராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
தொழிற்சாலையை நேற்று பார்வையிட்ட இந்த குழு, விரிவான அறிக்கையை ஒரு மாதத்திற்குள், அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.