பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு

5 ஆடி 2025 சனி 04:43 | பார்வைகள் : 135
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது' என டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பேசுகையில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோவிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்நாட்டு பார்லிமென்டில் அவர் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக உலக சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். கரீபியன் தீவு இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக இருக்கும்.
எதிரி
பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. அதற்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நின்றதற்காக கரீபியன் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி. நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப்' டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது வழங்கியதற்கு நன்றி. முதல் வெளிநாட்டுத் தலைவருக்கு இந்த விருதை வழங்குவது நமது ஆழமான உறவைப் பிரதிபலிக்கிறது.
அதிகாரம்
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு இரண்டு பெண் தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக டிரினிடாட் அண்டு டொபாகோ அரசாங்கத்தை பாராட்டுகிறேன். இந்த அவையில் இவ்வளவு பெண் உறுப்பினர்களைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எதிர்காலம்
பெண்கள் மீதான மரியாதை இந்திய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. நமது நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கைகளை வலுப்படுத்துகிறோம். விண்வெளி முதல் விளையாட்டு வரை பல்வேறு துறையில் இந்தியாவை பெண்கள் புதிய எதிர்காலத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.