சீனாவில் சத்துமருந்துக்காக ஆறு மில்லியன் கழுதைகள் பலி

30 ஆனி 2025 திங்கள் 19:35 | பார்வைகள் : 219
சீனச் சத்துமருந்துக்காக ஆண்டுதோறும் ஆறு மில்லியன் கழுதைகள் கொல்லப்படுவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஓர் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
‘எஜியாவ்’ (ejiao) என அழைக்கப்படும் சத்துமருந்தைத் தயாரிக்க கழுதையின் தோல்களிலிருந்து எடுக்கப்படும் வன்புரதம் (collagen) பயன்படுத்தப்படுகிறது.
அந்த மருந்துப்பொருள் தொழில்துறையின் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்று சீனாவைச் சேர்ந்த சியன்ஸான் எனும் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
சீனாவில் 1992ஆம் ஆண்டில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாகக் குறைந்துவிட்டது. இதனையடுத்து, அந்நாடு கழுதைகளுக்காக ஆப்பிரிக்காவை நாடத் தொடங்கியது.
கழுதைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து, அவ்விலங்கைக் கொல்வதற்கு 2024ஆம் ஆண்டு ஆபிரிக்க ஒன்றியம் 15 ஆண்டுகளுக்குத் தடைவிதித்தது.
சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 5.9 மில்லியன் கழுதைகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த ‘கழுதைக் காப்பகம்’ எனும் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2027ஆம் ஆண்டிற்குள் எஜியாவ் சத்துமருந்துத் துறைக்குக் குறைந்தது 6.8 மில்லியன் கழுதைகளின் தோல்கள் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழுதைகளுக்கான தேவை அதிகரித்துவருவதால் அவை சட்டவிரோதக் கும்பல்களின் இலக்காக மாறிவருகின்றன.
“கழுதைகளை விற்கும்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு முகவர்கள் மூலமாக வணிகர்கள் நெருக்குதல் அளிக்கின்றனர்,” என்று கழுதைக் காப்பகம் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.