இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுவா ?

14 ஆவணி 2025 வியாழன் 23:41 | பார்வைகள் : 161
இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்ததற்கான காரணம் குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தகவல்களை வெளியிட்டுள்ளார்.தொடக்க காலங்களில் இளையராஜா மற்றும் வைரமுத்து இணைந்து வழங்கிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இது வெற்றிகரமான கூட்டணி என பாராட்டுகள் குவிந்தன.
1980 களில் இருவரும் சுமார் 7 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினார்கள். இந்த காம்போவுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் 1986 இல் வெளிவந்தது. இந்த படத்திற்கு பின்னர் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இளையராஜா வளர்ந்ததற்கு தன்னுடைய பாடல் வரிகள் தான் காரணம் என வைரமுத்து பேசியதே அவர்கள் பிரிவதற்கு காரணம் என கூறியுள்ளார்.
அப்போது பேசிய கங்கை அமரன், 10 ஆண்டு காலம் இளையராஜா தன்னை ஒதுக்கி வைத்ததாகவும், அந்த காலகட்டத்தில் வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி தன்னுடைய இடத்தை பிடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.