இண்டி' கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

19 ஆவணி 2025 செவ்வாய் 03:51 | பார்வைகள் : 141
துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரை நிறுத்துவது என, 'இண்டி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதேநேரத்தில், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் திருச்சி சிவா அல்லது 'இஸ்ரோ' முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு, வரும் 21ம் தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா கவர்னராக உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மறைந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும், கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால், தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ், தமிழர் என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யும் கட்சி என்பதால், தமிழரான சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, ஓட்டளிக்காமல் நடுநிலை வகுப்பதா என்ற குழப்பத்தில் தி.மு.க., இருப்பதாக தெரிகிறது.
இன்னும் ஏழு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், தி.மு.க.,வுக்கு இந்த விஷயத்தில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கேற்ற வகையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வதற்காக, இண்டி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நேற்றிரவு நீண்ட நேரம் நடந்தது.
அப்போது, ராஜ்யசபா தி.மு.க., குழு தலைவரான சிவா அல்லது 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்த, பலரும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழ், ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளரான சிவா, 29 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, தி.மு.க., ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்தவர்; தி.மு.க., நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இது தொடர்பாக டில்லியில் நேற்று பேட்டி அளித்த சிவா, துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, இண்டி கூட்டணி தலைவர்கள் தான் முடிவு செய்வர். நான் எதுவும் கூற முடியாது,'' என்றார்.
எனினும், தமிழகத்திலிருந்து ஒருவரை களமிறக்க, கூட்டணி கட்சியான திரிணமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு, அனைத்து கட்சித் தலைவர்களிடமும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் பேசியுள்ளார். இதனால், இண்டி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, 'இண்டி கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுபவர் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதனால், முக்கிய தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
'துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்திவிட்டு, அதோடு அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடுவர் என்ற அச்சமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எந்த நேரத்தி லும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.