கம்யூ., தலைவருக்கு இபிஎஸ் காட்டமான பதில்!

20 ஆவணி 2025 புதன் 10:09 | பார்வைகள் : 278
வரும் 2026 தேர்தலில் சொந்தத் தொகுதியில் நான் தோற்கடிக்கப்படுவேன் என்கிறார் முத்தரசன். அதெல்லாம் உங்க அப்பா வந்தாலும் முடியாது,'' என்று காட்பாடியில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கம்யூனிஸ்ட் தலைவருக்கு காட்டமாக பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், இன்று வேலுார் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் இணைந்து சித்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம். நேற்று கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன்? கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில் தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.
மக்களுக்கு பிரச்னை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?
பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜகவோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.
அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன். உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம்.
நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள். உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.
நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன்.
தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின், அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025