Paristamil Navigation Paristamil advert login

அரட்டை செயலிக்கு அசுர வேகத்தில் கூடுது மவுசு; 1 கோடி பயனர்களை கடந்து புதிய சாதனை!

அரட்டை செயலிக்கு அசுர வேகத்தில் கூடுது மவுசு; 1 கோடி பயனர்களை கடந்து புதிய சாதனை!

9 ஐப்பசி 2025 வியாழன் 12:26 | பார்வைகள் : 100


சுதேசி செயலியான அரட்டைக்கு நாள் தோறும் மக்கள் ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது. தற்போது அரட்டை செயலியை டவுண்லோடு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது.

தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததாக சமூக வலைதளதங்கள் இருக்கிறது. அந்த சமூக வலைதளங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் உருவாக்கியது தான். இதற்கு போட்டியாக தான் தற்போது 'ஸோகோ' நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்த, சுதேசி செயலியான அரட்டையின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு அநியாய வரி விதித்த நிலையில், அந்த நாட்டு தயாரிப்புகள் மீது அதிருப்தி அடைந்த மக்கள் கவனம், சுதேசி செயலியான அரட்டை மீது திரும்பி உள்ளது. இதனால், நாளொன்றுக்கு சில ஆயிரம் புதிய பயனர்கள் சேர்ந்து கொண்டிருந்த 'அரட்டை' செயலியை, தற்போது தினமும் லட்சக்கணக்கான பேர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இதற்கு காரணம் அந்த செயலியில் இடம் பெற்று இருக்கும் பிரத்யேக வசதிகள் தான். வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகியவற்றில் இருக்கும் அம்சங்களுடன், அவற்றில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன. இதை பயன்படுத்துவோர், இணையத்தில் தொடர்ந்து அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி மதிப்புரைகள் எழுதி வருகின்றனர். இதுவும் டவுண்லோட் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

குறைந்த இணைய வேகம் இருக்கும் இடத்திலும், அரட்டை செயலி வேலை செய்யும். ஆண்ட்ராய்டு டிவியிலும் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப் செயலியை காட்டிலும் சிறப்பான ஆடியோ, வீடியோ அழைப்பு வசதிகள் அரட்டையில் உள்ளன. பயன்படுத்துவோருக்கு, தங்கள் டேட்டா குறித்த அச்சம் எதுவும் தேவையில்லை என்றும் அரட்டை செயலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

எனவே அரட்டை செயலிக்கு மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுண்லோடு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்