Paristamil Navigation Paristamil advert login

தொடரும் பிரிவுகள்....!!

தொடரும் பிரிவுகள்....!!

25 மாசி 2018 ஞாயிறு 11:42 | பார்வைகள் : 13467


உறவுச் சுவரில்
உயிர் ஒட்டிய நாளிலிருந்தே
பிரிவுப் பிசாசின்
கோரப்பற்களில்
ஈரம் மாறா இரத்தத் துளிகள்.
 
இரு உடல்
ஓருயிராய் பிணைந்து,
ஓருடல்
ஈருயிராய் தாய்மை அணிந்து,
பின்னொரு பொழுதில்
தொப்புள் கொடியின்
நெருக்கம் விட்டபோது
துவங்கிய பிரிவு.
 
பள்ளிக்கூட
ஆரம்ப நட்பு.
ஆற்றங்கரையில் ஒதுங்கிய
சிறு வயதுச் சங்கதிகள்,
பதின் பருவத்தில்
பயிரான
முகப்பருப் கனவுகள்.
 
அத்தனை
கானகக் குவியலிலும்
பிரிவைச் சந்திக்காத
பச்சைக் கிளை
ஒன்றையேனும்
பார்க்க இயலவில்லை.
 
பிரிவுகளில் பின்னால்
ஓடி ஓடி
கால் வலித்த காதல்கள்,
 
கடல்களைக் கடந்து
கட்டி வைக்கும்
மணல் கோபுரக் கரன்சிகள்,
 
தாய் நாட்டில்
ஓர் ஓட்டு வீட்டுக்குள்
ஒதுங்கிக் கிடக்கும்
தாய்ப்பாசக் கவலைகள்.
 
சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !
 
தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.
 
பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.
 
ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.
மன்னிக்க முடியாத இரவு

வர்த்தக‌ விளம்பரங்கள்