Paristamil Navigation Paristamil advert login

உணராத உணர்வுகள்......!

உணராத உணர்வுகள்......!

23 ஐப்பசி 2012 செவ்வாய் 08:03 | பார்வைகள் : 9783


சிலையாக சில உறவுகள்
உயிரின்றிய மௌனங்களாய்
கல்லாகிப்போன கனவுகளுக்குள்
வாசிக்கப்படாத வார்த்தைகளாய்
நிகழ்வுகளை தூவிவிட்டு
வேடிக்கை பார்க்கும் விதி...!
 
கணிப்பொறிக்குள் கண்கள் விழ
மறக்கப்படும் தொட்டில் பிள்ளைகளாய்
சீரியலுக்குள் உள்ளம் தாள
சனியனாகும் சமையலறைகளாய்
காலத்தை உண்டுவிட்டு
நாட்டியமாடும் இல்லறம்...!
 
ஆலய தரிசனம் ஆள் லயமாக
பூக்களை மறந்த பூசகராய்
கருவறை காதலர் கண்களாக
தாம்பூலம் மறந்த பக்தனாய்
இளமையை வீசிவிட்டு
வறுமையில் ஆடும் வாழ்க்கை...!
 
இயற்கையற்ற இயந்திர சாரல்களால்
மழைத்துளி மண்வாசனை மறக்க
அரும்புகள் உயிரியல் கனிகளாக
அமிர்தம் தேடும் மலர்களாய்
புதுமைகளை தந்துவிட்டு
புன்முறுவும் விஞ்ஞானம்...!
 
இப்படியே
எதிரும் புதிருமாய் ஏராளம் மாற்றங்கள்
நடைமுறைகளை துகிலுரிய
ஆசைகள் சுமக்கும் மனதில்
அன்பு மட்டும் சுடும் சுமைகளாய்
எல்லோராலும் வெறுக்கப்பட்டே
இறக்கப்படுகின்றன ....
மீண்டும் மானுடம் அழிவைநோக்கி.....!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்