Paristamil Navigation Paristamil advert login

உலகம் உருவான ரகசியத்தை கண்டறியும் ஆய்வில் வெளியான புதிய தகவல்கள்!

உலகம் உருவான ரகசியத்தை கண்டறியும் ஆய்வில் வெளியான புதிய தகவல்கள்!

6 கார்த்திகை 2021 சனி 14:09 | பார்வைகள் : 15163


உலகம் உருவானதன் ரகசியத்தை அறிய உதவும் ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
எண்ணிப் பார்க்க இயலாத ஆச்சரியங்களையும், எல்லையற்ற அதிசயங்களையும் உள்ளடக்கிய இந்தப் பிரபஞ்சம் உருவானது குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட முக்கியமான ஒன்று ஸ்டெரைல் நியூட்ரினோ (sterile neutrino) தொடர்பான ஆராய்ச்சி.
 
சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பின் போது உருவான அணுக்கள் ஒன்றிணைந்து இந்த பேரண்டத்தை உருவாக்கியதாக பெரும்பான்மையான அறிவியலாளர்களால் நம்பப்படுகிறது. ஒவ்வொரு கட்டடமும் செங்கல், மணல், சிமெண்ட் போன்ற பொருட்களால் உருவாவதை போல, இந்த பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது. அந்த அணுக்கள் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ஆகிய அடிப்படைத் துகள்களால் ஆனவை.
 
இவற்றை மேலும் பகுத்துப் பார்த்தால் போசான்கள், குவார்க்குகள், நியூட்ரினோக்கள் என பல நுண் துகள்களாகப் பிரிகின்றன. இதில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தான் தற்போது புதிய முடிவுகளை அளித்துள்ளது. நியூட்ரினோக்களை நாம் ஒவ்வொரு நொடியும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். திகில் திரைப்படங்களில் ஒரு நபரை பேய் ஒன்று ஊடுருவிச் செல்லும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதுபோலத் தான் சூரியனிலிருந்து வெளிப்படும் பல கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியிலும் நம் உடலை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
 
இவற்றில் எலக்ட்ரான், மியூவான், டாவ் என்ற மூன்று வகையான நியூட்ரினோக்கள் உள்ளன. இந்நிலையில் பொருள்களின் அடிப்படைக் கட்டமைப்பாக 'ஸ்டெரைல் நியூட்ரினோ' என்ற நான்காவது துகள் இருக்கும் என்று கோட்பாட்டு அளவில் முடிவு செய்த விஞ்ஞானிகள் அதனைத் தேடி ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
 
அமெரிக்காவில் சிகாகோவுக்கு அருகே உள்ள பட்டாவியா என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் பல நாடுகளை சேர்ந்த இயற்பியல் அறிஞர்கள் பங்கேற்றனர். 5 நாடுகளை சேர்ந்த 200 விஞ்ஞானிகள் சேர்ந்து மைக்ரோ பூஸ்டர் நியூட்ரினோ எக்ஸ்பெரிமென்ட் என்ற உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கருவியை உருவாக்கினர். மைக்ரோபூன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த கருவியை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.
 
இதன்படி ஸ்டெரைல் நியூட்ரினோ என்ற துகள் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை என்று ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. தாங்கள் அனுமானித்த ஒன்று இல்லை என முடிவாகி விட்டதால், இது அடுத்த கட்டத்தை நோக்கி தங்களை நகர்த்தும் முடிவு என்கின்றனர் விஞ்ஞானிகள். இயற்கையின் புதிர்களும், அதற்கு விடை காணும் மனிதர்களின் முயற்சியும் பிரபஞ்சம் உள்ளவரை தொடரும் என்பதையே இத்தகைய ஆய்வுகள் உணர்த்துகின்றன

வர்த்தக‌ விளம்பரங்கள்