Paristamil Navigation Paristamil advert login

சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?

சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?

27 ஆடி 2019 சனி 03:09 | பார்வைகள் : 11966


 கங்கையில் படகில் சென்ற ஒரு பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா? “என்றார். 

 
படகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.
 
“அப்படியா? வாழ்க்கையில் கால்பகுதியை வீணாக்கிவிட்டாயே! போகிறது. பாகவதமாவது தெரியுமா?” என்றார். 
 
“தெரியாதுங்களே” 
“அப்படியா? வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே! தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா?” 
“தெரியாதே பிரபு” 
 
“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா?” 
இவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான். 
 
“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” 
“தெரியாதேப்பா!” 
“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க?” 
பண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே! 
படகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே! 
 
யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதே இக்கதையின் நீதி! 
நன்றி : தமிழ் படைப்புகள்! 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்