Paristamil Navigation Paristamil advert login

சீனாவின் கடன் பொறியும் குளோபல் கேட்வே திட்டமும்!

சீனாவின் கடன் பொறியும் குளோபல் கேட்வே திட்டமும்!

11 மார்கழி 2021 சனி 11:19 | பார்வைகள் : 10017


இலங்கை போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டு இருப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்தக் கடன் பொறியில் இருந்து இந்த நாடுகளை மீட்கும் நோக்கில், குளோபல் கேட்வே (Global Gateway)  எனப்படும் உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக ஆரம்பித்துள்ளது.

 
2027 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் யூரோக்கள் ($341 பில்லியன்) பொது மற்றும் தனியார் நிதிகளில் வெளிநாடுகளில் EU உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இத் திட்டம் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு (China’s Belt and Road Initiative-BRI) போட்டியாகவே இருக்குமென்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 
குளோபல் கேட்வே திட்டம் தொடர்பான  ஐரோப்பிய ஊடகங்களின் விமர்சனத் தொனியும் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு மாற்றானதாகவே தெரிகின்றது.
 
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கம் வகிக்கவில்லை. ஆனாலும் குளேபல் கேட்வே என்ற உட்கட்டுமானத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை, மியன்மார் போன்ற சிறிய குறை வளர்ச்சியுள்ள நாடுகளைத் தங்கள் பக்கம் ஈக்க முடியுமென அமெரிக்க போன்ற மேற்கத்தைய நாடுகள் நம்புகின்றன.
 
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தாய்வானைப் பாதுகாக்கவும் நிதியுதவி செய்யலாமென்ற எதிர்ப்பார்ப்பும் உண்டு.
 
ஏனெனில் குளோபல் கேட்வே எனப்படும் இத் திட்டத்திற்கான ஆவணத்தில் சீனாவின் பெயர் குறிப்படப்படவில்லை. ஆகவே இத் திட்;டத்திற்குப் பின்னால் உள்ள அரசியல் கணக்கீடு, சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிரானதே என்ற முடிவுக்கு வரலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஜேர்மன் தூதுவர் மைக்கேல் கிளாஸ், இந்தத் திட்டம்  EU ஐ மிகவும் பயனுள்ள புவிசார் அரசியல் வீரராக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறார். அத்துடன் இத்திட்டம் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு மாற்றீடானது என்ற தொனியிலும் அவர் விபரிக்கிறார்.
 
கொவிட்-19 தொற்றுநோய், உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கை, மியன்மார் போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் பொருளாதாரம் மீளெழும்ப முடியாத நிலைமைக்குள் வந்துள்ளது. இதனால் குளோபல் கேட்வே என்ற திட்டம் பயனளிக்கும் என்று கூறினாலும், இதன் பின்னணியில் புவிசார் அரசியல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
 
ஐரோப்பாவின் பொருளாதார வெற்றியின் பெரும் பகுதி ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைக் கொள்ளையடித்ததன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள சீனாவின் குளோபல் ரைம்ஸ் என்ற ஆங்கில ஊடகம், கொவிட் 19 நோய்த் தாக்கத்தின் பின்னர் இலங்கை போன்ற நாடுகளுக்கான நிதியுதவிகளை ஐரோப்பிய நாடுகள் குறைத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
மேற்கு மற்றும் ஐரோப்பாவில் கடந்த இரு ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தவொரு சூழலில், இலங்கை போன்ற நாடுகளுக்குச் சீனா உதவியளித்ததாகவும் குளோபல் ரைம்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது.
 
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே என்ற உட்கட்டுமானத் திட்டத்தில் இருந்து வேறுபட்டதெனவும், குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில், சீனா பெரும் வெற்றியை அடைய முடிந்தமைக்குக் காரணம் எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமையே என்றும் குளோபல் ரைம்ஸ் சீனாவை நியாயப்படுத்துகின்றது.
 
ஆனால் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு அரசியல் பின்னணி இருப்பதாலேயே ஐரோப்பிய ஒன்றியம் குளோபல் கேட்வே திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த நேரிட்டது என்ற தொனியில் ஜேர்மன் தூதுவர் மைக்கேல் கிளாஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
 
குளோபல் கேட்வே திட்டத்தைச் செயல்படுத்தும் போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற மதிப்புகள் வலியுறுத்தப்படும் என்றும் தூதுவர் மைக்கேல் கிளாஸ் வலியுறுத்துகிறார். ஆகவே இத் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கிலேயே சீனாவின் கடன் பொறிக்குள் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என்று அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சுமத்துவதற்கான காரணங்கள் என்று கூறலாம்.
 
குறிப்பாக சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டதால், சிறிய நாடான உகண்டா தனது ஒரேயொரு விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்தது என்ற செய்தி கடந்தவாரம் சர்வதேச ஊடகங்களில் முக்கியம் பெற்றிருந்தது. இதன் பின்னணிலேயே சீனாவின் கடன் பொறிக்குள் உகண்டா என்ற செய்திகளுக்குச் சீனத் தூதரகம் மறுப்பு வெளியிட்டிருந்தது. சீனக் கடன் பொறி என்பது மேற்குல நாடுகளின் மிகைப்படுத்தப்படட கற்பிதம் என சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இலங்கையைப் பொறுத்தவரை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து தொடர்ச்சியாக நிதியுதவிகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ரமேஸ் பத்திரன செய்தியாளர்களிடம் கூறியுமுள்ளார். ஆகவே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய அவசரமான நோக்கம், இலங்கை சீனாவிடம் இருந்து அதிகளவு நிதியுதவி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதே.
 
இதற்காகவே குளோபல் கேட்வே திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜீ-7 மாநாட்டிலும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்தியா மூலமாகக் கூடுதல் உதவியளிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புதுடில்லியில் இந்திய உதவித் திட்டங்கள் பற்றியே அதிகளிவில் கவனம் செலத்தியிருந்ததார்.
 
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற மதிப்புகள் மேற்படுத்தப்படும் என்பது குளேபல் கேட்வே திடடத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில், அந்த நிதியுதவிகள் மூலம் உள்நாட்டு இனப் பிரச்சினைகளும் முடிவுக்கு வர வேண்டும் என்ற தொனி இலங்கைக்கு அமெரிக்காவினால்  உணர்த்தப்பட்டிருக்கின்றது.
 
ஆனால் இலங்கை இனப்  பிரச்சினையை வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாக மாத்திரமே அமெரிக்க- இந்திய அரசுகளினால் தற்போது அவதானிக்கப்படுகின்றன.
 
இலங்கை. மியன்மார் போன்ற வளர்ச்சி குறைநத் நாடுகளில் இருக்கும் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் விடுதலைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென குளோபல் கேட்வே திட்ட ஆவணத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படவில்லை.
 
மாறக இத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெறும் நாடுகள், தங்கள் மக்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற  விதப்புரைகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன
 
இதனாலேயே இலங்கையும் ஓரளவுக்குத் திருப்திகரமாக அமெரிக்க- இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் தொடர்பான நகர்வுகளுக்கு இணக்கம் தெரிவித்திருக்கிறது. சீனாவைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குளோபல் கேட்வே திட்டத்தை இலங்கையினால் புறக்கணிக்க முடியாது. அதேவேளை சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் இருந்தும் விடுபடமுடியாது.
 
ஆனால் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்ற விடயத்தில் இலங்கை அமெரிக்க- இந்திய நலன் அடிப்படையில் செயற்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது.
 
இலங்கை சீனாவிடம் நிதியுதவி பெறுவதில் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரச்சினையில்லை. ஆனால் கடன்பொறிக்குள் விழுந்து இலங்கையின் முக்கியமான படைத் தளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை சீனாவிடம் இழக்கும் ஆபத்தான நிலை வந்துவிடக்கூடாது என்பதிலேயே அமெரிக்க- இந்திய அரசுகள் கவனம் செலுத்துகின்றன.
 
இலங்கையின் இறைமை பழைமைவாய்ந்தது, தனித்துவமானது என்ற பேச்சை அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ கடந்த ஆண்டு கொழும்பில் நின்றபோது கூறியிருந்தமைகூட இதன் பின்னணியில்தான்.
 
அப்படிப் பார்த்தால், ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் விடுதலை இல்லை என்பது இங்கே தெளிவாகின்றது. ஜெனீவாவில் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட காலம் அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்க- இந்திய அரசுகள் ஜேர்மன் மூலமாகக் கொண்டுவர முயற்சிக்கின்றன. இதனை அறிந்தே இலங்கை கடந்த செப்ரெம்பர் மாதத்தில் இருந்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.
 
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று- ஜெனீவா தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்ற உணர்வு.
 
இரண்டாவது- சில சமயங்களில் இன அழிப்புப் பற்றிய பேச்சுக்கள், அல்லது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்ற கதைகள் வெறுமனே ஒப்பாசாரத்துக்கேணும் முன்னெடுக்கப்பட்டால், அதனால் எழக்கூடிய பக்கவிளைவுகள் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கும் என்ற அச்சம்.
 
ஆகவே இந்த இரு காரணங்களின் அடிப்படையில் இலங்கை தற்போது அமெரிக்க- இந்திய அரசுகள் முன்னெடுக்கும் திட்டத்திற்கு இணங்கியிருக்கின்றது. அதற்குச் சாதகமாக இலங்கை அரசியல் யாப்புச் சட்டத்தில் உள்ள 13ஐ நடைமுறைப்படுத்த ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
 
சிங்கள மக்களுக்கு நோகாமல், 13 ஐ முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்க- இந்திய அரசுகளைத் திருப்திப்படுத்தலாம் எனவும் இலங்கை நம்புகின்றது. அத்துடன் காரியம் சித்தியடைந்தவுடன் 13 ஐ எப்படி அகற்றிவிடலாமென்ற திட்டங்களும் இலங்கையிடம் இல்லாமலில்லை. (இது அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்)
 
போர் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எப்படியான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்பதைவிட. இலங்கை அரசைத் திருப்திப்படுத்திச் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தை எப்படி முறியடிக்கலாம் என்பதே அமெரிக்க- இந்திய அரசுகளின் பிரதான இலக்காக இருந்து.
 
அதற்காக 2012 இல் இருந்து ஜெனீவா என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி இலங்கையில் ஆட்சி மாற்றங்களைச் செய்தும் பயனளிக்கவில்லை.
 
இந்த நிலையில், சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கும் நாடுகளை மீட்பதற்கு குளோபல் கேட்வே உட்கட்டுமானத் திட்டம் இலகுவாக வெற்றியளிக்குமா என்ற சந்தேகங்களே விஞ்சியுள்ளன.
 
சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்க அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு முடியுமா இல்லையா என்பதைவிட, இலங்கை எந்தத் திட்டத்தையும் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றன.
 
ஏனெனில், இன்றுவரை அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு இலங்கை செல்லப்பிள்ளையாக இருப்பதே அதற்குப் பிரதான காரணம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்