Paristamil Navigation Paristamil advert login

ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப் போவது என்ன?

ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப் போவது என்ன?

23 பங்குனி 2014 ஞாயிறு 05:24 | பார்வைகள் : 9185


ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டத்தை நெருங்கியுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி இந்தத் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 27 அல்லது 28ம் திகதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பத்தி எழுதப்படும் போது பரிசீலனையில் இருக்கும் தீர்மான வரைபுக்கு போதிய ஆதரவு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

சில வேளைகளில் ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும்கூட தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி என்றே ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில் அடுத்தடுத்து 3 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் இந்தத் தீர்மானங்கள் மேற்குலகமும் தமிழர் தரப்பும் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துமா? என்ற சந்தேகமும் இருக்கவே செய்கிறது.

ஏனென்றால் இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஆணையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கிட்டத்தட்ட ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறைதான். இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்களும் அவ்வளவு கடுமையானதாக இல்லாவிடினும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதாக இருந்த போதிலும் அவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவற்றைப்போலவே இப்போதைய தீர்மான வரைபும் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக உள்ளது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டி வருகிறது.

எனவே இந்த வாரம் ஜெனிவாவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இது எவ்வாறு நடைமுறைத்தப்படும் என்று சந்தேகம் எழுவது இயல்பு.

இந்தத் தீர்மான வரைபின் பெரும்பாலான பகுதிகள் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளையே சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பகுதியில் தான் அதாவது போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் விவகாரத்தில் தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு விசாரணை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஆணையையே இது வழங்குகிறது.

எனவே இந்தத் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானது.

13வது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிருதல் விசாரணைகளை மேற்கொள்ளல் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தல் என்று விரியும் தீர்மான வரைபு கூறும் இல்கை அரசுக்கான கடப்பாடுகளை வெளியிலுள்ள எவராலுமே நடைமுறைப்படுத்த முடியாது.

அதேவேளை ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் ஒப்படைக்கப்படும் போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைகளையும் கூட இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி முழுமையாக முன்னெடுக்கவும் முடியாது.

ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும் விசாரணைகள் இலங்கைக்குள் இருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீறல்கள் நடந்த இடங்களை அவதானிக்கவும் சாட்சிகளை அழைத்து வாக்குமூலங்களைப் பெறவும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு நியாயங்களைப் பெறவும் அந்த விசாரணைக்குழுவோ விசாரணை அதிகாரியோ எப்படியும் இலங்கைக்கு வந்தேயாக வேண்டும்.

அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பும் அனுமதியும் அளிக்கவேண்டும்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை நிராகரித்துள்ள அரசாங்கம்,  எப்படி அந்தத் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும்.

அதுவும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஒரு புலி போலவே வர்ணிக்கும் அரசாங்கம் அவரால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை மட்டும் விசாரணைகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கும்.

இது எப்போதுமே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இருக்கும் சிக்கல்தான்.

பாதுகாப்புச் சபையைப் போன்று ஐநா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு அல்ல.

அதனால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசாரணைக்குழுவை நியமிக்க பேரவையால் பிறப்பிக்கப்படும் ஆணையை செயற்படுத்துவது எப்போதுமே சவாலாகவே இருந்துள்ளது.

அதனால்தான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

ஆனால் எப்போதுமே எந்தவொரு நாடும் தமது நாட்டில் நடக்கும் மீறல்கள் குறித்து வெளியிலிருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை விரும்புவதில்லை.

அதனால் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் கிடைப்பதென்பது மிகவும் அபூர்வமானது என்றாலும் ஒருசில உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இதுவே பாதுகாப்புச் சபையின் தீர்மானமாக இருந்தால் எப்படியோ ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நாடு வளைந்து கொடுத்துப் போக முடிவெடுத்துவிடும்.

ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்குழு விசாரணை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நாடு உள்ளே வர இடமளிக்காது போனால் வெளியிலிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டு வடகொரியா தொடர்கான நியமிக்கப்பட்ட இத்தகைய விசாரணைக்குழுவும் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலிருந்தே விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்தது.

அதுபோலவே இலங்கை இந்தத் தீர்மானத்தை நிராகரித்துள்ள நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கும் விசாரணைக்குழுவை உள்ளே வர அரசாங்கம் அனுமதிக்காது போனால் வெளியிலிருந்தே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலை ஏற்படும்.

சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ ஐநா நிபுணர் குழுவின் மூலமோ அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ ஐநா மனித உரிமை ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம்.

ஆனால் இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது.

எனினும் தீர்மான வரைபு ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கே ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த வாரம் கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்டதும் அதிகாரம் இல்லை என்றும் அதற்கு ஐநா சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியிருந்தார்.

ஆனால் ஜெனிவாவில் கடந்த வாரம் மனித உரிமை அமைப்புகளுடன் நடத்தப்பட்ட கரந்துரையாடலின் போது ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டிருந்தார்.

இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்துவரும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விசாரணை அதிகாரம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கிடையாது என்று குறிப்பிட்டிருந்தன.

ஆனால் கியூபாவோ ஐநா மனித உரிமை ஆணையாளருக்கே அதற்குரிய அதிகாரம் உஎள்ளது என்றும், அவரது பணியகத்துக்கு கிடையாது என்றும் வாதிட்டிருந்தது.

எனினும் ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு, கிழக்கு இணைப்பை ரத்துச் செய்யும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்த, சுனாமி நிவாரணப் பொதுக் கூட்டமைப்புக்கு எதிரான தடையுத்தரவை பெற்ற சிங்கள கடும்போக்குவாத சட்டத்தரணி கோமின் தயாசிறி, நவநீதம்பிள்ளைக்கு விசாரணை அதிகாரம் இல்லை என்றும் இந்தத் தீர்மானத்தின் ஊடாக அவருக்கு அத்தகைய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க அமெரிக்கா முனைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அதிகாரங்கள் என்னவென்று கேள்வியெழுப்பும் ஒரு தீர்மானத்தை முன்வைத்து இந்த விசாரணை முயற்சியை தோற்கடிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

இதற்குப் போதிய கால அவகாசமும் ஆதரவும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்த அமர்வு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வேண்டுமானால் 26வது அமர்வில் வரும் யூன் மாதம் இது பற்றிய தீர்மானத்தை முன்வைக்க தனது நட்பு நாடுகளின் மூலம் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைகளைத் தடுக்க இலங்கையும் தன்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு வாயப்புக்கள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது.

எவ்வாறாயினும் ஜெனிவா தீர்மானம் இலங்கையை மேலும் நெருக்கடியில் தள்ளிவிடப் போவது மட்டும் உறுதி.

ஏனென்றால் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் உள்நாட்டில் சிங்களத் தேசியவாதம் அரசாங்கத்தை விழுங்கிவிடும்.

இதற்கு இணங்காது போனால் சர்வதேச அளவிலான நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

விசாரணைக்குழுவை இலங்கை அனுமதிக்க மறுத்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தனிப்பட்ட ரீதியாக இலங்கை மீது பொருளாதார, பயணத் தடைகளை கொண்டுவரக்கூடும்.

அதற்கான சாத்திஜயங்களை இப்போதே அனுமானிப்பது கடினம்.

எவ்வாறாயினும் தனது தீர்மானத்தை ஜெனிவாவில் நிறைவேற்றும் கடப்பாட்டை மட்டும் மேற்குலகம் கொண்டிருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தும் கடப்பாடும் அவர்களுக்கு உள்ளது என்பதை மறந்து விட முடியாது.

-சுபத்ரா
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்