Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு பூரி

உருளைக்கிழங்கு பூரி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9815


 பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம். இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும். 

 
தேவையான பொருட்கள்: 
 
மைதா மாவு - 2-3 கப் 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். 
 
பின்பு அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, தண்ணீர் விடாமல் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். ஒருவேளை மைதா போதவில்லையெனில், அத்துடன் வேண்டிய அளவு மைதா மாவை சேர்த்து, பிசைந்து கொள்ளவும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிரித்து, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். 
 
இறுதியில் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான உருளைக்கிழங்கு பூரி ரெடி!!! இதனை பன்னீர் மசாலா அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். 
 
குறிப்பு: பொதுவாக பூரிக்கு மாவு பிசைந்த பின்னர், அந்த மாவை சிறிது நேரம் ஊற வைப்போம். ஆனால் இந்த பூரிக்கு அப்படி ஊற வைக்கக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள உருளைக்கிழங்கானது நீரை வெளியேற்றும். எனவே உருளைக்கிழங்கு பூரிக்கு மாவை பிசைந்த பின்னர், உடனே அதனை பூரிகளாக சுட்டு விட வேண்டும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்