Paristamil Navigation Paristamil advert login

பூசணிக்காய் சாம்பார்

பூசணிக்காய் சாம்பார்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9686


 திங்கட்கிழமை என்றாலே அனைவருக்கும் சமைப்பதற்கு ஒரு சோம்பேறித்தனம் இருக்கும். ஏனெனில் என்ன சமைப்பதென்றே தெரியாது. ஆகவே அப்போது எளிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் ஒரு சாம்பார் செய்ய நினைத்தால், அதற்கு பூசணிக்காய் சாம்பார் சரியானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

 

துவரம் பருப்பு - 1 கப் 

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு 

சின்ன வெங்காயம் - 3-4 

தக்காளி - 1 (நறுக்கியது) 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 

பூசணிக்காய் - 4-5 துண்டுகள் 

கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 

உப்பு - தேவையான அளவு 

 

தாளிப்பதற்கு... 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 

வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

 

செய்முறை: 

 

முதலில் புளியை 1 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து, நன்கு பிசைந்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். 

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து, நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். 

 

அடுத்து, நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை சேர்த்து லேசாக வதக்கி விட்டு, மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் புளியை ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

 

இப்போது எளிய முறையில் சூப்பரான பூசணிக்காய் சாம்பார் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்