Paristamil Navigation Paristamil advert login

யாழில் பேத்தியை கொலைசெய்த பாட்டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் பேத்தியை கொலைசெய்த பாட்டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

15 புரட்டாசி 2023 வெள்ளி 02:32 | பார்வைகள் : 4317


யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை நேற்று மாலை பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

குறித்த பாட்டி, மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ தாதி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த பாட்டியும் , அவரது பேத்தியான சிறுமியும் , வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக அங்கு தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் திருகோணமலையில் இருந்து வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதற்காக யாழ். வந்ததாகவும் குறித்த பாட்டி ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இவர்கள் ஒரு தடவை மாத்திரமே ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் முகாமையாளர் கோப்பாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

குறித்த அறையில் பாட்டியால் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடிதமொன்று கிடைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் தாம் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

“தனக்கு கடுமையாக உளச்சிக்கல் உள்ளதாகவும் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் தான் இறந்த பின்னர் எனது பேத்தி தனிமையில் கஷ்டப்படுவார் என்பதால் இருவரும் சாக எண்ணினோம்.

எமது மரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை. எங்கள் சடலங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் வைத்தியசாலை ஊடாகவே அடக்கம் செய்யவும்“ என அந்த கடிதத்தில் குறித்த பெண் குறிப்பிட்டிருந்தார்.

கடிதம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் கடிதத்தை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்