ஆப்கானிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
11 ஐப்பசி 2023 புதன் 09:11 | பார்வைகள் : 4416
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை 6.3 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் உருவானது.
40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக 8 முறை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சனிக்கிழமை கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஆண்கள்,பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், 20 கிராமங்களில் இருந்த 1983 வீடுகள் தரைமட்டமாக ஆனதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 பேரிடர் மீட்பு குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.