Arras தாக்குதல் - 10 பேர் கைது - பதிலளிக்க மறுக்கும் பயங்கரவாதி!

14 ஐப்பசி 2023 சனி 12:59 | பார்வைகள் : 11565
Arras நகர பாடசாலையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mohammed. M எனும் 20 வயதுடைய பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதலாளி கைது செய்யப்பட்டதோடு, அவனது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளான். அத்தோடு அவர்களுடன் தொடர்புடைய மேலும் எட்டுப் பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில், தாக்குதலாளியின் தந்தை, தாய், சகோதரி, அவனுடைய இரு சகோதரர்கள், உறவினர்கள் என மொத்தமாக பத்துப் பேர் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளி Mohammed. M இதுவரை எவ்வித கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த குறித்த நபர் அவரது ஐந்து வயதில் பிரான்சுக்கு அகதியாக தஞ்சம் புகுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.