Paristamil Navigation Paristamil advert login

தெற்காசியாவில் நைதரசன் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுதல் - ஓர் கருவியாக ஒத்துழைப்பு

தெற்காசியாவில் நைதரசன் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுதல் - ஓர் கருவியாக ஒத்துழைப்பு

2 தை 2024 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 948


சூழலியல் விஞ்ஞானத்தில் வளர்ந்து வரும் பிரச்சினையான நைதரசன் மாசுபாடானது, சூழற் தொகுதிகளில் முக்கியமாக கைத்தொழிற்துறை செயன்முறைகள், விவசாயம் மற்றும் சுவட்டு எரிபொருள் தகனம் போன்ற மனித நடவடிக்கைகளிலிருந்து உருவாகின்ற, நைதரசன் சேர்மங்களின் மிகையான வெளியேற்றத்தை குறிக்கின்றது. 

நைதரசன் வாழ்க்கைக்கு இன்றியமையாத கூறு என்றாலும், அதன் அதிகப்படியான அளவு சூழலியல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நைதரசன்  மாசுபாடு இயற்கை நைதரசன்  வட்டத்தை சீர்குலைக்கின்றது. இந்த இடையூறு அமோனியா மற்றும் நைதரசு ஒட்சைட்டுகள் உட்பட பல்வேறு வடிவங்களில் தாக்கமடையக்கூடிய நைரசனின் அதிகப்படியான தன்மைக்கு வழிவகுக்கிறது.

இந்த சேர்வைகள், சூழலுக்கு வெளிவிடப்பட்டவுடன், சிக்கலான மாற்றங்களுக்கு உட்படலாம் என்பதுடன் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன. பிரதானமான பங்காளராக வாகன உமிழ்வுகளிலிருந்தான நைதரசன்  ஒட்சைட்டுக்கள் மற்றும் விவசாய உரங்களிலிருந்தான அமோனியா ஆகியவை உள்ளடங்கும். இந்த நைதரசன்  சேர்வைகள் சூழலுக்கு வெளியிடப்பட்டதும், காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பங்களிப்பதுடன், மிக நுண்ணிய சூழலியல் சமநிலையை சீர்குலைக்கும்.

நீரியல் சூழற்தொகுதிகளில், நைதரசன்  மாசுபாடு அல்கா வளர்தல், ஒட்சிசன் குறைவு மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு போராடும் "இறந்த மண்டலங்கள்" ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், நைதரசன்  அடிப்படையிலான காற்று மாசுபடுத்திகள் புகைமூட்டம் மற்றும் மனிதர்களில் சுவாச பிரச்சினைகளுக்கு பங்களிக்க முடியும். நைதரசன் மாசுபாட்டின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

நைதரசன்  மாசுபாட்டிற்கு உணர்திறன் கொண்ட சூழற்தொகுதி அமைப்புகள் காடுகள், ஈரநிலங்கள் மற்றும் நீரியல் தொகுதிகள் உள்ளிட்ட பரந்த தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த சூழல்கள் அவற்றின் சிக்கலான சூழலியல் சமநிலைகள் காரணமாக குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவையாகும்.

நைதரசன்  மாசுபாடு இந்த நுட்பமான அமைப்புகளை போசணைகளின் கிடைக்கக்கூடிய  தன்மை மற்றும் சேர்வையை மாற்றுவதன் மூலம் சீர்குலைப்பதுடன், இது உயிர்ப்பல்வகைமையின் மீது தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நிலம்சார் சூழற் தொகுதி அமைப்புகளில், உயர்ந்த நைதரசன்  அளவுகள் சில தாவர இனங்களுக்கு மற்றவற்றை விட சாதகமாக இருப்பதுடன், இது தாவர சமூகங்களின் அமைப்பை பாதிப்பதுடன் அதன் விளைவாக, இணைந்துள்ள விலங்கினங்களின் வாழ்விடத்தை மாற்றுகிறது.

நீரியல் சூழற்தொகுதிகளில் முதன்மையாக விவசாய ஓடிவழிதலில் இருந்தான நைதரசன்  சேர்மானங்கள், அதிகப்படியான அல்கா வளர்ச்சியைத் தூண்டுதுடன், ஒட்சிசன் அளவைக் குறைப்பதுடன் மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை எதிர்மறையாக பாதிக்கின்றது. இந்த சூழற்தொகுதி அமைப்புகளினுள் இடைத்தொடர்புகளின் சிக்கலான வலையமைப்பு மேலும் பாதிப்புக்குள்ளாகி, இனங்களின் வீழ்ச்சி அல்லது இழப்புக்கு வழிவகுக்கும்.

உயிர்ப்பல்வகைமை மீதான மிக முக்கியமான தாக்கமானது இனங்கள் செழுமையின் குறைவையும் சமுதாய கட்டமைப்புகளில் மாற்றங்களையும் ஏற்படுத்துவதுடன், இது நைதரசன்  மாசுபாட்டைத் தணிப்பதற்காக இந்த உணர்திறன் வாய்ந்த சூழற்தொகுதி அமைப்புகளின் சிக்கலான சமநிலையைப் பாதுகாப்பதற்கான விரிவான நடவடிக்கைகளின் முக்கியமான தேவையை வலியுறுத்துகிறது.

நைதரசன் மாசுபாட்டின் பிரதான மூலங்கள்

நைதரசன்  மாசுபாடு முதன்மையாக வளிமண்டல படிவு, விவசாய ஓடிவழிதல் மற்றும் சுவட்டு எரிபொருளின் தகனம் ஆகிய மூன்று பிரதான மூலங்களால் ஏற்படுகிறது. வளிமண்டல படிவு என்பது நைதரசன்  சேர்வைகளை காற்றில் வெளியிடுவதை உள்ளடக்குவதுடன், இது நிலம் மற்றும் நீர் மேற்பரப்புகளில் படிவதுடன், அவற்றின் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள சூழற்தொகுதி அமைப்புகளை பாதிக்கிறது.

அதிகப்படியான நைதரசனை அடிப்படையாக கொண்ட உரங்களால் தூண்டப்படும் விவசாய ஓடிவழிதல், நீர்நிலைகளில் நுழைவதுடன், போசணைக்கூறுகளின் சமநிலையற்றதன்மை மற்றும் அல்கா வளர்தலை தூண்டுகிறது. சுவட்டு எரிபொருட்களின் தகனம் நைதரசன்  ஒட்சைட்டுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதுடன், இது நைதரசன்  மாசுபாட்டை மிகைப்படுத்துகிறது. 

இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூலங்கள் நைதரசன் மாசுபாட்டின் சிக்கலான தன்மையையும் அதன் பாதிப்பை தணிக்க விரிவான உத்திகளின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.

தெற்காசிய சூழற்தொகுதி அமைப்புகளின் மீதான தாக்கங்கள்

நைதரசன்  மாசுபாடு தெற்காசிய சூழற்தொகுதி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்சினை என்பதுடன், இது தாவர பல்வகைமை, ஈரநிலங்கள் மற்றும் நீர்வாழ் தொகுதிகளை பாதிக்கின்றது.

இலங்கையின் மழைக்காடுகளில், உயர்ந்த நைதரசன்  அளவுகள் போசணை வட்டத்தின் சமநிலையை சீர்குலைத்து, உயிர்ப்பல்வகைமையான வாழ்விடங்களின் அமைப்பில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஈரநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போசணை பரிமாணத்தை எதிர்கொள்வதுடன், இந்த நீர்தேங்கியுள்ள சூழற்தொகுதி அமைப்புகளைச் சார்ந்துள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதிக்கின்றது. நீரியல் சூழற்தொகுதிகள் அதிகரித்த நைதரசன்  ஓடிவழிதலால் பாதிக்கப்படுகின்றன, இதனால் நற்போசணையாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் அல்கா வளர்ச்சி ஏற்படுவதுடன், ஆறு மற்றும் ஏரிகளின் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்றன.

தெற்காசிய சூழற்தொகுதிகளின் தனித்துவமான உயிர்ப்பல்வகைமை நைதரசன்  மாசுபாட்டால் அச்சுறுத்தப்படுவதுடன், இது பிராந்தியத்திற்கு குறிப்பான தணிப்பு உத்திகளை தேவைப்படுத்துகின்றது. இலங்கை மற்றும் தெற்காசியாவில் கைத்தொழிற்துறை, விவசாயம் மற்றும் வாகன செயற்பாடுகள் ஆகியன நைதரசன் மாசுபாட்டிற்கான பிரதான பங்களிப்பாளர்களாகும்.

இலங்கையில், விவசாயத்தில் நைதரசன்  அடிப்படையிலான உரங்களின் பரவலான பயன்பாடு பிரதான மூலமாக உள்ளதுடன், வயல்களில் இருந்து வெளியேறும் ஓடிவழிதல் மேலதிக நைதரசனை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்கிறது. நகரமயமாக்கல் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி ஆகியவை வளிமண்டல நைதரசன் படிவுக்கு பங்களிக்கின்ற அதே நேரத்தில் போக்குவரத்து மற்றும் சக்தி உற்பத்தியில் சுவட்டு எரிபொருளின் தகனம் நைதரசன்  ஒட்சைட்டுகளை காற்றில் வெளியிடுகிறது.

தெற்காசியாவில், துரிதமான கைத்தொழில்மயமாக்கல், சனத்தொகை வளர்ச்சி மற்றும் விரிவடைந்து வரும் விவசாயத் துறை ஆகியவை நைதரசன்  மாசுபாட்டை தீவிரப்படுத்துகின்றன. சனத்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் போதிய கழிவுநீர் முகாமைத்துவமின்மையால் நைதரசன் நிறைந்த கழிவுகள் நீர்நிலைகளில் சேர்வதற்கு வழிவகுக்கிறது. நீடித்து நிலைத்திருக்கும் சூழலியல் நடைமுறைகளுடன் பொருளாதார அபிவிருத்தியை சமநிலைப்படுத்துவது இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இரு நாடுகளிலும் முக்கியமானதாகும்.

இலங்கையில் நைதரசன்  மாசுபாடு

இலங்கையின் விரைவான நகரமயமாக்கல் மற்றும் திட்டமிடப்படாத அபிவிருத்தி ஆகியன குறிப்பாக தீவின் மழைக்காடுகள் மற்றும் ஈரநிலங்களின் ஒருமைப்பாட்டை பாதிக்கின்ற நைதரசன்  மாசுபாட்டின் அச்சுறுத்தலுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. நகர்ப்புறங்கள் விரிவடைவதால்,  கைத்தொழில்மயமாக்கல் மற்றும் வாகனப் போக்குவரத்து ஆகியவை பரவலாகி, கணிசமான அளவு நைதரசன்  சேர்வைகளை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.

நகர்ப்புற மையங்களில் சுவட்டு எரிபொருட்களின் தகனம் நைதரசன்  ஒட்சைட்டுக்களை வெளியிடுவதுடன், இது வளிமண்டல படிவு மூலமாக, மழைக்காடுகள் உட்பட அருகிலுள்ள சூழற்தொகுதி அமைப்புகளில் நிலைப்படுத்தப்படுகின்றது. நைதரசனின் இந்த வௌியேற்றுகை,  போசணைகளின் கிடைப்புத் தன்மை மற்றும் மண்ணின் அமைப்பை மாற்றுவதன் மூலமாக உயிர்ப்பல்வகைமையின் வாழிடங்களின் நுட்பமான சமநிலையை சீர்குலைக்கிறது.

அதேசமயம், திட்டமிடப்படாத நகர்ப்புற அபிவிருத்தியால் நீர் ஊடுருவ முடியாத மேற்பரப்புகளில் இருந்து வெளியேறும் ஓடிவழிதல் அதிகரித்து, நைதரசன்  நிறைந்த மாசுபடுத்திகளை முக்கியமான ஈரநிலங்கள் உட்பட அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்கிறது. ஈரநிலங்கள் இயற்கையான வடிப்பான்களாக செயற்படுகின்றன, ஆனால் நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நைதரசனின்  சுமை அவற்றின் போசணைச்சத்து பரிமாணத்தை சீர்குலைப்பதுடன், இது நற்போசணையாக்கத்திற்கு வழிவகுத்து அவற்றால் ஆதரிக்கப்படுகின்ற பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதிக்கிறது.

மேலும், நகரமயமாக்கல் இயற்கையான வாழ்விடங்களை ஆக்கிரமித்து, நிலங்களை கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பிற்காக மாற்றுவதால், இந்த சூழற்தொகுதி அமைப்புகளின் மீதான அழுத்தம் தீவிரமடைவதுடன், அவை நைதரசன்  மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு மிகவும் இலகுவாக பாதிக்கப்படுகின்றன. விரைவான நகரமயமாக்கல், திட்டமிடப்படாத அபிவிருத்தி மற்றும் நைதரசன்  மாசுபாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள், இலங்கையின் மழைக்காடுகள் மற்றும் ஈரநிலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிப்பதற்கு நீடித்து நிலைத்திருக்கின்ற நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சூழலியல் முகாமைத்துவமை நடைமுறைகளின் அவசரமான தேவையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த அபிவிருத்திகளின் அடிப்படையில், இலங்கை பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நைதரசன்  மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் தேசிய உரக் கொள்கையானது, உரங்களின் வினைத்திறனான மற்றும் சீரான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய படியென்பதுடன், இது போசணை இழப்பைக் குறைத்து சூழலியல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், 1951 ஆம் ஆண்டின் மண் பாதுகாப்புச் சட்டம், மண்ணரிப்பு மற்றும் போசணை கசிவைக் குறைப்பதற்கு உரம் மற்றும் எரு பிரயோகித்தல் உள்ளிட்ட மட்காப்பு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. 2016 ஆம் ஆண்டின் தேசிய நீர் தரப்படுத்தல் கொள்கையானது குறிப்பாக நைதரசன்  மாசுபாட்டை இலக்காகக் கொண்டதுடன், மாசுபாட்டிலிருந்து நீர் வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. 

மேலும், 2004 இன் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையானது நைதரசன்  மாசுபாட்டை ஒரு கணிசமான சுற்றுச்சூழல் கரிசனமாக அங்கீகரித்து அதன் தணிப்புக்கு ஆதரவளிக்கும் ஒரு ஒட்டுமொத்தமான கட்டமைப்பாக செயற்படுகிறது.

தெற்காசியாவின் பரந்த சூழலில், நைதரசன்  மாசுபாட்டைச் சமாளிப்பதற்கு பல நாடுகள் கொள்கைகளை வகுத்துள்ளன. தெற்காசியா நைதரசன்  நிலையம் (SANH) ஆராய்ச்சி, இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் கொள்கை பரப்புரையாற்றுகை ஊடாக நீடித்து நிலைத்திருக்கின்ற நைதரசன் முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராந்திய முயற்சியாக தனித்து நிற்கின்றது.

மாலைத்தீவு போன்ற நாடுகள் கழிவு நீரை நிவர்த்தி செய்வதற்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நைதரசன்  வெளியேற்றத்தைக் குறைப்பதற்குமென 2015 இன் தேசிய கழிவு முகாமைத்துவ கொள்கையை நிறுவியுள்ளன. நேபாளத்தின் தேசிய சுற்றுச்சூழல் கொள்கை 2019 நைதரசன்  மாசுபாட்டை ஓர் முக்கிய சுற்றுச்சூழல் சவாலாக அடையாளப்படுத்துவதுடன், இதை தணிப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதேபோல், வங்காளதேசத்தின் தேசிய உரக் கொள்கை 2018, உர பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் விவசாயத் துறையில் போசணை இழப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகைய பாராட்டத்தக்க முயற்சிகள் இருந்தபோதிலும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் நைதரசன்  மாசுபாட்டை நிவர்த்தி செய்யும் கொள்கைகளில் தொடர்ச்சியான இடைவெளிகள் உள்ளன. சவால்களில் மட்டுப்படுத்தப்பட்ட அமுலாக்கம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை உள்ளடங்குவதுடன், வினைத்திறனாக அமுலாக்குவதற்கான முக்கியமான தேவையை எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த கொள்கைகளுக்கு இடையே உள்ள துண்டாடுகை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றாக்குறை ஆகியவை நைதரசன்  மாசுபாட்டை முழுமையாகக் கையாள்வதற்கு தடையாக உள்ளன. நைதரசன்  மாசுபாட்டின் மூலங்கள் மற்றும் தாக்கங்களை வலியுறுத்தி, நடத்தை மாற்றங்களைத் தூண்டுவதற்கு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரச்சாரங்கள் அவசியமாகும். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் உர முகாமைத்துவம் போன்ற துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்துவது நைதரசன்  மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சூழலியல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க சக்தியை வழங்குகிறது.

தீர்வு: பிராந்திய மற்றும் உலகளாவிய பங்காண்மை

தெற்காசியாவில் நைதரசன்  மாசுபாடு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை வினைத்திறனாக சமாளிப்பதற்கு, சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதும் பிராந்தியத்திற்கு குறிப்பான முயற்சிகளில் முனைப்பாக பங்கேற்பதும் அவசியமாகும்.

இந்த மூலோபாயமானது ஐக்கிய இராச்சிய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி பங்காண்மையான தெற்காசிய நைதரசன் நிலையம் (SANH) மூலமாக காட்டப்படுகிறது. மொத்தமாக 32 புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தெற்காசியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த செயற்திட்ட ஈடுபாட்டு பங்குதாரர்கள் நைதரசனின் நீடித்து நிலைத்திருக்கின்ற முகாமைத்துவத்திற்கான முறைமைகளை உருவாக்க SANH ஆல் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.

மேலும், தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் (SACEP) சுற்றுச்சூழலுக்கு பொறுப்புணர்வான நைதரசன் முகாமைத்துவ நடைமுறைகளை அமுலாக்குவதை ஊக்குவிப்பதற்காக சர்வதேச நைதரசன் முகாமைத்துவ அமைப்புடன் (INMS) இணைந்து செயற்படுகிறது. இந்த ஒத்துழைப்புகள் மற்றும் முன்முயற்சிகளின் உருவாக்கம், நைதரசன்  மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் அது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை வெற்றிகரமாக நிவர்த்தி செய்வதற்கு தெற்காசியாவிற்கு உதவுகிறது.

இந்த முன்முயற்சிகளும் பங்காண்மைகளும் அறிவைப் பகிர்வதற்கும், இயலளவை உருவாக்குவதற்கும், கொள்கைகளை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.

பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி, Dilmah Conservation சமீபத்தில் நைதரசன்  மாசுபாட்டால் ஏற்படும் பன்முக சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியை முன்னெடுத்தது.

டாக்டர் அஜிங்க்யா தேஷ்பாண்டே மற்றும் டாக்டர் கோதமி வீரகோன் போன்ற ஆராய்ச்சியாளர்களுடன் ஒன்றிணைந்து, இந்த நிறுவனம் UKRI GCRF தெற்காசிய நைதரசன் நிலையம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் கூட்டாக இணைந்து சர்வதேச ஆராய்ச்சி செயற்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சிகள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நைதரசனின் தாக்கம் தொடர்பான நமது புரிதலை ஆழமாக்குவதையும், விவசாயத்தில் நைதரசன்  முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய நுண்ணறிவுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குயின்ஸ்பரி தோட்டத்தில் அமைந்துள்ள Dilmah Conservation இனுடைய ஒரு புவி காலநிலை மாற்ற நிலையம், பல்வேறு நைதரசன்  அளவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் காடுகளில் ஏற்படும் சூழற்தொகுதி மாற்றங்கள் குறித்த முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.

ஆராய்ச்சி கண்டறிவுகள் மற்றும் சமூக ஈடுபாட்டிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம், நிலையான தீர்வுகளை ஆதரிப்பதிலும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான கூட்டு அர்ப்பணிப்பை வளர்ப்பதிலும் Dilmah Conservation தொடர்ந்தும் முக்கிய வகிபங்கினை ஆற்றுகின்றது. 

2020 ஆம் ஆண்டு முதல், UKRI GCRF தெற்காசிய நைதரசன் நிலையம் (SANH) அயனமண்டல காடுகளின் சூழற்தொகுதியினுள் அமோனியா மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஒரு ஆய்வை நடாத்தி வருகிறது. செயற்திட்ட பங்காளர்கள் தெற்காசிய வன சூழற்தொகுதி அமைப்புகளில் நைதரசன்  மாசுபாட்டின் விளைவுகள் குறித்த அடிப்படை தரவுகளின் அவசர தேவையை நிவர்த்தி செய்வதற்காக, தில்மா குயின்ஸ்பெரி தோட்டத்திற்கு அருகில் உள்ள ரிலகல வன சரணாலயத்திற்குள் ஒரு சோதனை தளத்தை நிறுவினர். 

சுவட்டு எரிபொருளை தகனம் செய்வதால் உருவாகும் அதிகப்படியான நைதரசன்  கழிவுகள் மற்றும் உரங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக நைதரசன்  கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலில் நைதரசன்  வெளியீட்டின் ஒரு முக்கிய வடிவம் அமோனியாவாகும், இது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் நுண்ணிய துகள்கள் காற்று மாசுபாட்டை உருவாக்குவதுடன் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.

SANH ஆராய்ச்சி செயற்திட்டம், மிகவும் குறைவாக கற்கப்பட்ட தெற்காசிய வன சூழற்தொகுதிகளில் நைதரசன்  மாசுபாட்டின் விளைவுகள் குறித்த அடிப்படையான தரவுகளை வழங்குவதுடன், நீடித்து நிலைத்திருக்கின்ற நைதரசன்  முகாமைத்துவ கொள்கைகளுக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முக்கியமான பகுதியானது காடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட அமோனியா மேம்படுத்தல் அமைப்பின் புத்தாக்கமான பயன்பாட்டை உள்ளடக்கியதுடன், இது உலகளவில் இதுபோன்ற இரண்டு தளங்களில் ஒன்றாகும். அமோனியா தொடர்பான ரிலகல பரிசோதனையானது முழு ஆசியாவிலேயே முதன் முறையானதாகும்.

நைதரசன்  மாசுபாட்டின் தாக்கத்தைத் தணிக்கவும், உணர்திறன் வாய்ந்த சூழற்தொகுதி அமைப்புகளுக்குள் நுழையும் மாசுபடுத்திகளைக் குறைக்கவும் கூட்டு முயற்சிகள் அவசியமாகின்றன. வினைத்திறனான உத்திகளை அமுலாக்குவதில் அரசாங்கங்கள், சூழலியல் அமைப்புகள் மற்றும் விஞ்ஞான சமூகங்களுக்கு இடையிலான கூட்டு பிரதான வகிபங்கினை கொண்டிருக்கின்றது. ஆராய்ச்சி கண்டறிவுகள், தொழில்நுட்ப கண்டறிவுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்வது விரிவான கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுகிறது.

தெற்காசியாவில், குறிப்பாக இலங்கையில், நைதரசன்  மாசுபாடு மற்றும் சூழற் தொகுதிகளில் அதன் தாக்கம் தொடர்பான அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவசர நிலையை உணர்ந்து, இலங்கை தேசிய கொள்கைகளை ஆரம்பித்துள்ளதுள்ளதுடன், நிலைத்தன்மையான விவசாய நடைமுறைகள் மற்றும் கைத்தொழிற்துறை உமிழ்வுகள் மீதான கடுமையான விதிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

அரசாங்கம் நைதரசன்  மாசுபாடு மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சூழலியல் அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் ஒன்றிணைந்துள்ளது. நடைபெறுகின்ற செயற்திட்டங்கள், குறிப்பாக மழைக்காடுகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற உணர்திறனான பகுதிகளில் நைதரசன்  ஓட்டத்தை கண்காணித்தல் மற்றும் தணிப்பதில் கவனம் செலுத்துகிறது.

மேலதிகமாக, நைதரசன்  அடிப்படையிலான உரங்களில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு நட்புறவான விவசாய நுட்பங்களை பின்பற்றுவதற்கான உந்துதல் உள்ளது. இந்த முயற்சிகள் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது.

கொள்கை முன்முயற்சிகள், சமூக ஈடுபாடு மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமாக, தெற்காசிய நாடுகள், இலங்கையை முன்னணியில் கொண்டு, நைதரசன்  மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றின் பல்வகைமையான மற்றும் பலவீனமான சூழற்தொகுதிகளைப் பாதுகாப்பதற்கும் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்