Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் வெப்ப அலை எச்சரிக்கை- உலக சாரணர் கூட்டம்

தென் கொரியாவில் வெப்ப அலை எச்சரிக்கை- உலக சாரணர் கூட்டம்

5 ஆவணி 2023 சனி 10:05 | பார்வைகள் : 2931


தென் கொரியாவில் வெப்ப அலைகள் காரணமாக பலர்  உடல்நல குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக மிகவும் பிரம்மாண்டமாக தென் கொரியாவில் உலக சாரணர் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

14 வயது முதல் 18 வயதுடைய சுமார் 43,000 சாரணர்கள் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தென் கொரிய அரசாங்கம் தன்னுடைய எல்லா வளங்களை உபயோகித்து கடுமையான வெப்ப அலை எச்சரிக்கைக்கு மத்தியில் உலக சாரணர் சந்திப்பு கூட்டம் பாதுகாப்பாக முடிவடைவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் ஜனாதிபதியால் சிறப்பு கேபினட் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உலக சாரணர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்து 6 பில்லியன் வொன் செலவழிக்க ஒப்புதல் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 மேலும் சாரணர்கள் நீரேற்றத்துடன் இருப்பதற்காக குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் தண்ணீர் தொட்டி வாகனங்கள் அப்பகுதியில் அமைக்க ஜனாதிபதி யூன் சுக் இயோல் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் உலக சாரணர் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 600 டீன் ஏஜ் இளைஞர்கள் வெப்பம் சார்ந்த உடல்நல குறைவுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டஜன் கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரிய பிரதமர் ஹான் டக்-சூ அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில் 30 ராணுவ மருத்துவர்களும், 60 செவிலியர்களும் அவசர கால முகாமுக்கு செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரம் தென் கொரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய அட்வெஞ்சர் மற்றும் தலைமை சாரணர் பியர் கிரில்ஸ் மாணவர்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு வலியுறுத்தினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்