இலங்கையில் வீடொன்றில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு
18 சித்திரை 2024 வியாழன் 16:11 | பார்வைகள் : 604
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் பல நாட்களாக அங்கு காணவில்லை எனவும், வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.
பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, இரண்டு பெண்கள் தரையில் இறந்து கிடந்தனர்.
கிராம அலுவலரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 65 மற்றும் 79 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (18) நடைபெறவுள்ளன.