நாற்பது வருடகால யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் குர்திஸ் போராளிகள்

2 பங்குனி 2025 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 696
துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிகேகே அமைப்பிற்கு நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம் அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது.
1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பிகேகே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிராட் செய்தி நிறுவனம் சமாதான ஜனநாயக சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக பிகேகே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக பிகேகே அமைப்பு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எங்கள் படைப்பிரிவினர் ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என பிகேகே அமைப்பு அறிவித்துள்ளது.
மத்தியகிழக்கில் அடிப்படை மாற்றங்கள் பல நிகழ்ந்துகொண்டுள்ள சூழ்நிலையிலேயே குர்திஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அயல்நாடான சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அதிகார மறுசீரமைப்பு இடம்பெறுகின்றது,லெபானில் ஹெஸ்புல்லா அமைப்பு பலவீனமடைந்துள்ளது மேலும் காசாவில் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போரிடுகின்றன.
1984 இல் ஆரம்பித்த துருக்கி அரசாங்கத்திற்கும் பிகேகே அமைப்பிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
2015 இல் இரு தரப்புபிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒகலானை தனிமைதீவு சிறையில் சந்தித்த பின்னர் அவரது அறிவிப்பை வெளியிட்ட குர்திஸ் அரசியல்வாதிகள் குர்திஸ் போராளிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் எனஅவர் கேட்டுக்கொண்டார் என தெரிவித்தனர்.
இதேவேளை தங்கள் தலைவரின் அறிவிப்பு குர்திஸ்தானிலும் மத்திய கிழக்கிலும் புதிய வரலாற்று செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதை வெளிப்படுத்துவதாக பிகேகே அமைப்பின்மத்திய குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனிற்கு சாதகமாக அமையலாம்.