Paristamil Navigation Paristamil advert login

பன்னீர் தோசை

பன்னீர் தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10017


 தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி. பெரும்பாலும் தோசையில் மசாலா தோசை என்று உருளைக்கிழங்கை மசாலா போன்று செய்து, அதனை தோசையின் நடுவில் வைத்து, சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் சற்று வித்தியாசமாக, அந்த மசாலாவுடன் பன்னீரை சேர்த்து செய்து, தோசையில் வைத்து செய்தால் தான் பன்னீர் தோசை. இப்போது அந்த பன்னீர் தோசையை அருமையான சுவையில் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
அரிசி - 3 கப் 
உளுத்தம் பருப்பு - 1 கப் 
உருளைக்கிழங்கு - 3-4 (வேக 
பன்னீர் - 1/2 கப் (துருவியது) 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது) 
கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
றிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
வெண்ணெய் - 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் இரவில் படுக்கும் போது அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், அதனை கிரைண்டரில் போட்டு, நைஸாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து, 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின், வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.
 
 பின்பு தோசைக் கல்லை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி, உருகியதும், கல்லில் தேய்த்து, தோசை மாவால் தோசை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த தோசை ஒரு தட்டில் வைத்து, அதில் வதக்கி வைத்துள்ள பன்னீர் கலவையை சுற்றி தேய்த்து, சுருட்டி பரிமாற வேண்டும். இதேப் போல் வேண்டி அளவில் தோசை ஊற்றி, சாப்பிடலாம். இப்போது சுவையான பன்னீர் தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்