Paristamil Navigation Paristamil advert login

சோள மாவு அல்வா

சோள மாவு அல்வா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10454


 தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், அனைவரும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி நீங்கள் யோசித்து செய்யும் ரெசிபிக்களின் பட்டியலில் சோள மாவு அல்வாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அல்வா வித்தியாசமான ருசியில் இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த சோள மாவு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
 
தேவையான பொருட்கள்:
 
சோள மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப் + 1 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1/4 கப் (நறுக்கியது)
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
 
செய்முறை:
 
முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சிறு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
 
அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும். அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா போன்று வரும் வரை கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்